நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா.. இந்த 8 கிராம மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. அரசின் புதிய அனுமதி
சென்னை: கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலம் என்று பொருள்.. நத்தம் புறம்போக்கு நிலம் என்றால், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் எனப்படும். கிராம நத்தம் நிலத்தை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.. தற்போது 6 மாவட்டங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை பற்றி பார்ப்போம்.
நத்தம் புறம்போக்கு நிலங்கள் என்பது, கிராமங்களில் குடியிருப்புக்காக பயன்படுத்தப்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆகும்... அரசு பதிவுகளில் இவை "புறம்போக்கு" என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும். விவசாயம் அல்லாமல், மக்கள் வீடு கட்டி வாழ்வதற்காக இந்த நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அன்றைய காலங்களில் பட்டா இல்லாத பலரும், அரசு அனுமதி அல்லது பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இந்த நிலங்களில் குடியேறினார்கள்.. பல வருடங்களாகவே இவர்கள் வசித்து வசித்தாலும், நில உரிமை ஆவணம் இல்லாததால், கட்டிட அனுமதி, வங்கி கடன், அரசு திட்டங்கள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டன.
நத்தம் புறம்போக்கு நிலம்
காரணம், நத்தம் புறம்போக்கு நிலங்கள் பொதுவாக கிராம எல்லைக்குள் அமைந்திருக்கும். சாலை, குளம், மேய்ச்சல் நிலம் போன்ற பிற புறம்போக்கு நிலங்களிலிருந்து, குடியிருப்பு பயன்பாடு என்பதால் இவை வேறுபடுகின்றன.
எனவேதான், மக்களின் நீண்டகால வசிப்பை கருத்தில் கொண்டு, அரசு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நிலங்களை பட்டா நிலங்களாக மாற்றுகிறது. தேவையான ஆவணங்கள் இருந்தால், இந்த நிலங்களில் வசிப்பவர்கள் பட்டா பெறலாம்.
இந்நிலையில், தமிழகத்தில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் வகையில், அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
நத்தம் புறம்போக்கு நிலங்கள்
கடலூர், தேனி, தென்காசி, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 8 கிராமங்களில், நத்தம் புறம்போக்கு நிலங்களை பட்டா நிலங்களாக மாற்றி, நிலவரி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நத்தம் புறம்போக்கு நிலங்களில் பல வருடங்களாகவே குடியிருந்து வரும் மக்கள், இதுவரை உரிய பட்டா இல்லாமல் வசித்து வந்தனர். இவர்களுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கும் நோக்கில், நத்தம் வகை நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் அரசால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் கீழ், அந்த நிலங்களில் வசிப்பவர்கள் தேவையான ஆதார ஆவணங்களை சமர்ப்பித்து, பட்டா பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடுபட்ட கிராமங்கள்
இதனிடையே, சில நிர்வாக காரணங்களால் இந்த திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்ட சில கிராமங்கள் இருப்பதும் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.. இதையடுத்து, அந்த கிராம மக்களும், தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு, அந்த விடுபட்ட கிராமங்களையும் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது.. இதன் தொடர்ச்சியாக, தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நிலத்தின் நிலை, மக்கள் வசிப்பு, ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து, விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணைகளின் மூலம், அந்த கிராமங்களில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலங்கள், தனியார் பெயரில் பட்டா நிலங்களாக மாற்றப்படுகின்றன. இதனால், அங்கு வசித்து வரும் மக்களுக்கு நில உரிமை சட்டபூர்வமாக உறுதி செய்யப்படுகிறது.
இதுதான் அந்த 8 கிராமங்கள்
இந்த திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் மேலூர், வேலுடையன்பட்டு, வடக்குத்து கிராமங்களும், தேனி மாவட்டத்தில் டி.கள்ளிப்பட்டி கிராமமும், தென்காசி மாவட்டத்தில் மேலகரம் கிராமமும், நாமக்கல் மாவட்டத்தில் திப்ரமகாதேவி, பெரம்பலூர் மாவட்டத்தில் பென்னகோணம், திருச்சி மாவட்டத்தில் மேளசீதேவிமங்கலம் ஆகிய கிராமங்களும் இந்த பட்டியலில் உள்ளன
.
மேற்கண்ட கிராமங்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்கள், இனி அந்த நிலங்களில் முறையான கட்டிட அனுமதி பெற்று வீடுகள் கட்டிக் கொள்ளலாம். அதேபோல், மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் எளிதாக பெறலாம்.. வங்கி கடன் உள்ளிட்ட நிதி உதவிகளை பெறவும் பட்டா உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications