உயர்சாதினு நினைப்பா? சர்ச்சையில் சிக்கிய ஈவிகேஎஸ்! கைதட்டிய கி.வீரமணி!நோட்டீஸ் அனுப்பிய எஸ்சி ஆணையம்
சென்னை : இளையராஜாவை சாதிப்பெயர் கூறி திட்டிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அந்த கருத்தை வரவேற்கும் விதமாக கரவொலி எழுப்பிய திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக 15 நாட்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது..
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.
அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரை பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது. சாதிய மனநிலையில் இளையராஜாவை அவர் ஒருமையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஈரோட்டில் நடந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

ஒருமையில் பேச்சு
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்" என ஒருமையில் பேசினார்.

தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதி ரீதியிலாக ஒருவரை திட்டுவது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடும் குற்றமாகும், அதனடிப்படையில் சென்னையை சேர்ந்த மூர்த்தி என்பவர் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின. அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்பு பிரிவு 338ன் கீழ் அதிகாரம் உள்ளது.

ஆணையம் நோட்டீஸ்
அந்த அடிப்படையில், இந்த இருவர் மீதும் காவல்துறையினர் பதிந்த வழக்கு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications