நாவலூர் சுங்கச்சாவடி.. மூச்சுமுட்டும் பழைய மகாபலிபுரம் சாலை.. கோட்டைக்கு பறந்த விஷயம்.. என்னவாம்
சென்னை: நாவலூர் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் பெருத்த வேதனையை வாகன ஓட்டிகளுக்கு தந்து வருகிறது.. அத்துடன், ஓஎம்ஆர் குடியிருப்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
நாவலூர் சுங்கச்சாவடி தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை தந்து வருகிறது.. ராஜீவ் காந்தி சாலை மெட்ரோ ரயில் பணி தொடங்கியதை தொடர்ந்து, நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..
சவாரிகள்: எனவே, இதை அகற்ற வேண்டும் என்று ராஜீவ் காந்தி சாலையை ஒட்டியுள்ள மக்கள் கோரிக்கையை ஏற்கனவே விடுத்துள்ளனர்... அதாவது, குறுகலாக மாறி, சவாரி தரமில்லாத சாலைக்கு அரசு தரப்பில் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்பதே இவர்களின் கேள்வியாக உள்ளது.

அதாவது, மத்திய கைலாஷில் இருந்து ஆறு வழிச்சாலைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் சோழிங்கநல்லூர் சிக்னல் வரை மட்டுமே பணிகள் நடைபெறும் என நினைத்திருந்த நிலையில், இப்போது சோழிங்கநல்லூர் - நாவலூர் இடையே தடுப்புகள் வந்துள்ளன... சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது..
கட்டணம்: சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் இல்லாவிட்டாலும்கூட, மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதியாக இது உள்ளதால், வார இறுதி நாட்களிலும் ஒவ்வொரு நாளும் நீண்ட வரிசைகள் உள்ளன... அதனால், இங்கு கட்டண வசூல் தேவையில்லை என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது..
மொத்தம் 6 வழி சாலையாக இருந்தது இருபுறமும் தலா 2 சாலைகளாக மாற்றிவிட்டதாலேயே இந்த சிரமங்கள் ஏற்படுகின்றன.. ஆனால் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் மட்டும் தவறாமல் வாங்கி விடுவதாக ஓஎம்ஆர் குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கிறார்கள்..
இதுகுறித்து ஓஎம்ஆர் குடியிருப்பாளர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.. அதில், "மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக நடைபெறும்போது, 5வது சுங்கச்சாவடியும் நீக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் அதிகமாக இருப்பது சுமையாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இடம்பெறக் கூடாது. ஆனால் நாவலூர் சுங்கச்சாவடி அமைந்திருப்பது சென்னை மாநகராட்சியில் இருந்து வெறும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது..
கட்டுமானப்பணிகள்: நாவலூரில் உள்ள 5வது கேட் தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், ஓஎம்ஆர் தெற்கு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்ததும், இந்த கேட் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்..
ஆனால், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கான அணுகுமுறையில் ஏன் இந்த வேறுபாடு உள்ளது? தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு, கிரேட்டர் சென்னை மாநகராட்சி எல்லையில் இருந்து வெறும் 1 கிமீ தொலைவில் உள்ள நாவலூரில் அரசு நடத்தும் சுங்கச்சாவடியை மூட வேண்டும் .

இழுத்து மூடுங்கள்: ஓஎம்ஆரின் தெற்குப் பகுதியில் (சோழிங்கநல்லூர் மற்றும் நாவலூர் இடையே) மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலை இருபுறமும் 2 வழிச்சாலையாகக் குறைக்கப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலையின் அகலம் குறைந்தாலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கிறது.
பழைய மகாபலிபுரம் சாலையில் வசிப்பவர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாவலூர், ராஜீவ் காந்தி சாலை, ஓஎம்ஆர் ஆகிய டோல்கேட்களை அகற்றுவது குடிமக்களின் நிதி நெருக்கடியைத் தணிப்பது மட்டுமின்றி, சென்னைவாசிகளின் போக்குவரத்து வசதி மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றெல்லாம் வேதனை தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பு: நாவலூர் சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், இதற்கு விரைவில் தீர்வு காணப்படுமா? என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications