இரட்டை குழந்தைகளுடன் "தல" தீபாவளி.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட தீபாவளி வாழ்த்து வீடியோ
சென்னை: தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, குழந்தைகளுடன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன் - விக்னேஷ் தம்பதி
இதனை தொடர்ந்து உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த தம்பதி சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

வாடகைத் தாய்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2 குழந்தைகளையும் பிடித்தபடி இருந்தனர். இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விதிமீறல்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரை சென்றது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

போலீசில் புகார்
இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் புகாரளித்தார்.

வழக்கறிஞர் கோரிக்கை
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில், "மத்திய, மாநில அரசுகளின் விதியை மீறி திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகை தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருந்தார்.

தீபாவளி வாழ்த்து
ஒருபக்கம் இப்படி விமர்சனங்களும், புகார்களும், நடவடிக்கைகளும் சென்றுகொண்டிருக்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுடன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications