விஜய் தலைமையில் ஒரு அணி.. டிடிவி தினகரன் சொன்ன அடுத்த நாளே மாற்றம்.. எடப்பாடி பழனிசாமிக்கு ட்விஸ்ட்!
சென்னை: அமமுக கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதம் முடிவு செய்யப்படும் என்று டிடிவி தினகரன் கூறி இருப்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை நாட்களாக என்டிஏ கூட்டணியில் இருந்து வருவதாக டிடிவி தினகரன் பேசி வந்த நிலையில், திடீரென அவர் பேச்சில் மாற்றம் ஏற்பட்டதற்கு விஜய் காரணமா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறது. இன்னொரு பக்கம் புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறி வருகிறது.

தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவு அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் 2006ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று கணிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு 10 முதல் 15 வரை வாக்கு சதவிகிதம் பெறலாம் என்று கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஆமோதித்திருந்தார். நிச்சயமாக 2006ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று வெளிப்படையாக கூறி இருந்தார். தொடர்ந்து திமுக, அதிமுக மட்டுமல்லாமல் தேர்தல் நெருங்கும் போது விஜய் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என்றும் கூறி இருந்தார்.
இதனிடையே நேற்று டிடிவி தினகரன் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் பலத்தை நிரூபிப்போம். டிசம்பர் மாதத்தில் அமமுக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும். அமமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அப்போதுதான் தெரியும். தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அளித்தோம். ஆனால் இம்முறை கூட்டணி குறித்து நான் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்று கூறி இருக்கிறார். டிடிவி தினகரனின் பேச்சு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் இத்தனை நாட்களாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக உள்ளது என்று டிடிவி தினகரன் பேசி வந்தார். அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கும் திட்டத்தில் இருந்தார். அவருக்கு 4 முதல் 6 தொகுதிகளை வரை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் திடீரென டிடிவி தினகரன் ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
அதிலும் விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் என்று கூறிய 2 நாட்களில் டிடிவி தினகரன் இப்படி பேட்டி கொடுத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியை விடுத்து டிடிவி தினகரன் விஜய்யுடன் இணைவாரோ என்ற சந்தோகமும் எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பும் விஜய்யுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications