நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்ரவதை.. நெல்லை ஆட்சியர், கமிஷனருக்கு சம்மன்- மனித உரிமை ஆணையம்
சென்னை: நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 6 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
நெல்லை மாவட்டத்தின் தனியார் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த ஆசிரியர் ஜெலாலின் என்பவர் மாணவர்களை அடித்து சித்ரவதை செய்வதாக புகார் வந்தது. மேலும் ஆசிரியர் மாணவர்களை அடித்து தாக்கும் வீடியோவும் வெளியாகி இருந்தது.

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த கொடூர சம்பவம் பல மாதங்களாக நடந்து வந்ததும் தெரியவந்தது. இதன் பின்னர் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாநில மனித உரிமை ஆணையமும் தனியார் பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியது.
சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து புகார் அளிக்க யாரும் முன் வராததால், தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று அன்றைய தினமே மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தான் இன்று நீட் பயிற்சி மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட மாநகராட்சி ஆணையர் ஆகிய 3 பேருக்கும் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்மனுக்கு 6 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்ட சம்மனில், இந்த தனியார் பயிற்சி மையம் எதன் அடிப்படையில் அனுமதி பெறப்பட்டது, அனுமதி கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்ட சம்மனில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளாரா, வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications