முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்று நீட் தேர்வு: MBBS முடித்த 1.60 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 600 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. எம்பிபிஎஸ் முடித்த 1.60 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி.,எம்.எஸ். மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன. தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (நீட்) தகுதி பெறுபவர்களை கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (NTA) நடத்துகிறது.

நீட் தேர்வு
2023-2024 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் நிறைவடைந்தது. இன்டர்ன்ஷிப் நிறைவு செய்யாத மாணவ, மாணவிகளால் தேர்வு எழுத முடியாது என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பல்வேறு அமைப்பினர் தொடர் கோரிக்கை வைத்ததையடுத்து ஜனவரி 14 தேதிக்குப் பிறகு அவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்வு முகமை கூறியது.

வெளிமாநிலங்களில் தேர்வு மையம்
விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. தேர்வு மையங்களுக்கு செல்வதற்காகவே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிவரும் என்றும், விண்ணப்பித்தவர்களில் கர்ப்பிணி பெண்களும் உள்ளார்கள் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். எனினும், என்டிஏ மாற்றங்களைச் செய்யவில்லை.

600 மையங்கள்
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 271 நகரங்களில் சுமார் 600 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுவோர் காலை 7 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.60 லட்சம் பேர்
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுத உள்ளனர். தேர்வு முடிவு வரும் 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில்
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சியுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிப்புகளுக்கு உள்ள 2,100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 1,050 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 1,050 இடங்களில் 50 சதவீத இடங்கள் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications