நீட் தற்கொலை.. அரசியல் லாபத்திற்காக இளைஞர்களை மூளை சலவை செய்கிறார்கள்.. பிரேமலதா குற்றச்சாட்டு!
சென்னை: நீட் தற்கொலைகள் பெரிய அதிர்ச்சி அளிக்கிறது, அரசியல் லாபத்திற்காக சிலர் இளைஞர்களை மூளை சலவை செய்கிறார்கள் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிகவின் 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று சென்னை கோயம்பேட்டில் அதற்கான விழா நடைபெற்றது . கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா இந்த கூட்டத்தில் பேசினார். நீட் தொடங்கி இந்தி திணிப்பு வரை பல்வேறு விஷயங்கள் குறித்து இவர் நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.

மூளை சலவை
இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் அனைத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள். நீட் தேர்வை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இளைஞர்களின் உயிரோடு விளையாட கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சி தருகிறது. எனக்கு இது பெரிய வேதனை அளிக்கிறது. இளைஞர்களை சிலர் மூளை சலவை செய்கிறார்கள்.

மொழி
தங்கள் அரசியல் வெற்றிக்காக இளைஞர்களை மூளை சலவை செய்து, அரசியல் செய்கிறார்கள். மாணவர்களின் உயிரோடு அரசியல் கட்சிகள் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இனியும் இது தொடர கூடாது. மொழியை வைத்தும், படிப்பை வைத்தும் அரசியல் செய்ய கூடாது. இளைஞர்கள் இவர்களை புரிந்து கொண்டு அவர்களிடம் நெருங்காமல் இருக்க வேண்டும்.

இலவசம் எப்படி
இலவசத்திற்கு பின் நாம் இனியும் செல்ல கூடாது. இலவசம் இலவசம் என்று சென்றால் தமிழகம் வளர்ச்சி அடையாது. நீர் தேர்வை தேமுதிக எதிர்க்கிறது. அதே சமயம் நீட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில் முதலில் கையெழுத்து போட்டது யார் என்று பார்க்க வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி இருந்த போதுதான் தமிழகத்திற்கு நீட் வந்தது.

தமிழகம்
நீட் குறித்து நடிகர் சூர்யா கூறிய கருத்து சரியா தவறா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். மரணத்தில் அரசியல் செய்யும் கீழ்த்தரமான அரசியல் வேறு எங்கும் நடக்காது. தமிழகத்தில் மட்டுமே அது நடக்கிறது. இன்னொரு பக்கம் மொழியை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். மொழி அரசியல் செய்யும் திமுகவின் குடும்பத்தினர் இந்தி படித்துள்ளனர். ஆனால் தங்களுக்கு இந்தி தெரிந்தாலும் மக்களுக்கு இந்தி தெரிய கூடாது என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள், என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications