நீட் மசோதா விவகாரம்....தமிழக எம்.பிக்கள் குழுவினரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை: டி.ஆர்.பாலு
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள் குழுவினரை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில்..
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு மனு கொடுத்தது. இக்குழுவில் திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.பிக்கள் இடம்பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மனு தரவும் தமிழக எம்.பிக்கள் குழு திட்டமிட்டிருந்தது.

அமித்ஷா அலுவலகத்தில்..
தமிழக எம்.பிக்கள் குழுவினருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒதுக்கி இருந்த நேரம் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக எம்.பிக்கள் குழுவினர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் கோரும் மனுவை கொடுத்தனர்.

நேரம் ஒதுக்காத அமித்ஷா
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஜனாதிபதி அலுவலகத்தில் நாங்கள் மனு கொடுத்த பின்னர் அது உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எங்களுக்கு கடிதம் அனுப்பினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலில் நேரம் ஒதுக்கி இருந்தார். பின்னர் இந்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசனப்படிதான் மசோதா
தற்போது வரை எங்களுக்கு மாற்றப்பட்ட நேரம் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அரசியல் சாசன விதிகளின் படியே தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் தர வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் அடங்கிய குழுதான் அமித்ஷாவிடம் நேரம் கேட்டிருக்கிறது. அதனால் சந்திக்க நிச்சயம் நேரம் ஒதுக்குவார். அமித்ஷாவைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படக் கூடியவர். அவர் எங்களுக்கு நேரம் ஒதுக்கி தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications