நாயை தொடுவாங்க.. எங்களை தொட மாட்டாங்க! நீயா நானாவில் வெளிப்பட்ட தீண்டாமை - வெளுத்து வாங்கிய கோபிநாத்
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்ற விவாதத்தில், வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் தீண்டாமையை கடைபிடிப்பதாக பணிப்பெண்கள் வேதனையுடன் தெரிவித்து இருப்பது நவீன தீண்டாமையை அம்பலப்படுத்தி இருக்கிறது.
விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
குறிப்பாக அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி, விளையாட்டு, சமூக ஊடகம் என பல்வேறு தலைப்புகளை கையில் எடுத்து காலத்துக்கு ஏற்ப நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் விவாதத்தை நடத்தி வருகிறார்.

பணிப்பெண்கள் விவாதம்
இந்த நிலையில் இந்த வாரம் வேலைக்கு அமர்த்திய குடும்பத்தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில், 'பணிப்பெண் ஒருவர் நாய்களுக்கு சோறு வைப்பதுபோல் தனித்தட்டு, தனி டம்ளர் கொடுக்கிறார்கள்.' என்று சொன்னவுடன் குடும்பத்தலைவி பெண் ஒருவர், '10 ஆண்டுகளுக்கு முன் இது இருந்திருக்கலாம். இப்போது இல்லை.' என்று பதிலளித்தார்.

நாயை தொடுவார்கள்
உடனே கோபிநாத் பணிப்பெண்களிடம், 'இங்கே யாருக்கெல்லாம் தனி தட்டு, டம்ளர் வேலை செய்யும் இடத்தில் உள்ளது?' என்று கேட்க பலரும் கை தூக்கினர். ஒரு பணிப்பெண், 'கடைக்கு போக சொல்வார்கள். காசை தூக்கி போடுவார்கள். அருகில் உள்ள நாயை தொடுவார்கள். காய்கறியை நான் வெட்டிவைப்பேன் அவர்கள் சமைப்பார்கள். ஆனால் காபியை சூடு செய்து வைக்க கிச்சனுக்குள் விட மாட்டார்கள். நாங்கள் குடித்த டம்ளரை வாஷ் பேசனில் கழுவ வேண்டாம் என்று சொல்லி வெளியில் கழுவ சொல்வார்கள்.' என்றார்.

நவீன தீண்டாமை
மற்றொரு பெண், 'அவர்கள் வீட்டு பாத்திரத்தை எங்களிடம் கொடுத்துவிட மாட்டார்கள். ஆனால், குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் கவரில் போட்டோ அல்லது ஸ்வீட் இருந்த பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து தருவார்கள்.' என்றார். 'எனக்கும் இதே நிலைதான் சார். தனி டம்ளரில் குடித்துவிட்டு கழுவி வைத்துவிட்டு போக சொல்வார்கள்.' என்கிறார் மற்றொரு பெண்.

குடும்பத் தலைவி கேள்வி
'நான் சமையல் வேலை செய்கிறேன் சார். எனக்கும் இதே நிலைதான். சாப்பாட்டைகூட வருத்தமாகவே சாப்பிடுவதுபோல் இருக்கும்.' என கண்ணீருடன் தெரிவித்தார் மற்றொரு பணிப்பெண். உடனே கோபிநாத், 'எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதெல்லாம் இருக்கிறதா?' என்று சொல்லி முடிப்பதற்குள், குடும்பத் தலைவி ஒருவர், 'அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டுதானே இந்த வேலைக்கு வருகிறார்கள்.' என்று கேட்டார்.

கோபிநாத் கோபம்
கோபிநாத் கோபமாக, 'எதை ஒப்புக்கொண்டு... என்ன பேச்சு இதெல்லாம்? இங்கு யாரெல்லாம் தனி தட்டு கொடுத்திருக்கிறீர்கள்.?' என்று கேட்கிறார். ஒரு பெண் 'பாரம்பரியமாக பழகிவிட்டோம் சார்.' என்று சொல்ல 'அந்த காலத்தில் வேலைக்காரர்களுக்கு தனித்தட்டு இருந்ததை இப்போது பின்பற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.' என கோபிநாத் பதிலடி கொடுத்தார்.

சத்தியம் கேட்ட கோபிநாத்
அதே பெண், 'வேலைக்காரர்களுக்கு என்று இல்லை. நாங்களும் அப்படிதான் சாப்பிடுகிறோம்.' என்று சொல்ல, கோபிநாத் அவர் அருகே சென்று, 'சத்தியம் பண்ணி சொல்றேன். வீட்டில் தட்டு மாற்றி சாப்பிட்டதே இல்லை என்று சொல்லுங்க.' என சத்தியம் கேட்டார். அதற்கு அந்த பெண், சாப்பிட்டுள்ளோம். என்று பதிலளிக்க, இவர்களை மட்டும் தனியாக ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள் என கோபிநாத் கேட்டார்.

திருந்திய பெண்
எச்சில் படும் என்று அந்த பெண் சொல்ல, 'உங்கள் எச்சில் தட்டை அவர்கள் கழுவும்போது அவர்கள் சாப்பிட்ட தட்டில் எச்சில் இருந்தால் கழுவ மாட்டார்களா? பின்னர் ஏன் தனித்தட்டு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.' என்று கோபிநாத் கேள்வி எழுப்பினார். உடனே அந்த பெண் ஆரம்பத்திலிருந்தே அப்படி பழகிட்டோம். இனி செய்ய மாட்டோம் என்று கூறினார்.

என்ன மனநிலை?
அதன் பின்னர் பேசிய கோபிநாத், 'எதோ பயங்கரமாக மாறிவிட்டோம் என்கிறோம். அலுவல் ரீதியாக பணி செய்யும் பெண்களுக்கான பாதுகாப்பு, சுதந்திரம், உரிமை சம்பந்தமாக பேசுகிறோம். ஆனால் அதை பேசும் நீங்கள் உங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தனித்தட்டு கொடுப்பேன். கேட்டால் எச்சில் பாத்திரத்தில் நான் எப்படி சாப்பிடுவேன் என்று கேட்பது எந்த மாதிரியான மனநிலை. நாம் எங்கு மாறி இருக்கிறோம்.' என அவர் கேட்டார்.












Click it and Unblock the Notifications