நெல் ஜெயராமனுக்கு உரிய கவுரவம்.. பட திறப்பு விழாவில் அமைச்சர் காமராஜ் உருக்கம்
சென்னை: வேளாண் துறை மூலமாக நெல் ஜெயராமன் கவுரவப்படுத்தபடுவார் என்று படத்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர் நெல் ஜெயராமன். புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று மறைந்த நெல் ஜெயராமனின் படத்திறப்பு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதுமிருந்து, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், முன்னிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் . காமராஜ் கலந்துகொண்டு நெல் ஜெயராமன் உருவபடத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக போராடியவர் நெல் ஜெயராமன். விவசாயமும், விவசாயிகளும் இருக்கும் வரை நெல் ஜெயராமனின் பெயர் நிலைத்திருக்கும். கோவில்களுக்கு திருவிழா நடத்தி வருகின்ற காலகட்டத்தில் நெல்லுக்கான ஒரு திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தி தனிப்பெரும் மனிதராக வெற்றி வெற்றி கண்டவர் நெல் ஜெயராமன்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பாரம்பரிய நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அவரது எண்ணங்களை நடைமுறைப்படுத்தியதனடிப்படையில், அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது .
ஆனால் அவரது குடும்ப வாழ்க்கையில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வெற்றி பெற முடியவில்லை. அவர் எடுத்த முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் . வேளாண்மை துறை மூலமாக நெல் ஜெயராமன் கவுரவப்படுத்தபடுவார். இந்த உறுதியை தமிழக முதலமைச்சரே என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.