அப்பாடா..! முத்துநகர் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த ரயில்வே.. போன வேகத்தில் திரும்பி வரும் நெல்லை ரயில்
சென்னை: பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து, திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயிலை ரயில்வே ரத்து செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மீண்டும் தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயிலை இயக்க கோரி கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தெற்கு ரயில்வே இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
தென் மாவட்டங்களின் மிக முக்கிய நகரங்களாக நெல்லை - தூத்துக்குடி உள்ளன. தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம், தொழில்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால், இந்த இரு நகரங்களுக்கு இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தொழில் நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயணம் செய்து வருகிறார்கள்.

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்துகள் அடிக்கடி இருந்தாலும் ரயில் வசதி அவ்வளவாக இல்லை. தூத்துக்குடி- நெல்லை இடையே பயணிகள் ரயில் தினமும் காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை நாரைக்கிணறு, கைலாசபுரம், மணியாச்சி, ஒட்டநத்தம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த மாதம் 15 ஆம் தேதி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து, தூத்துக்குடி - நெல்லை - தூத்துக்குடி ரயில் (வண்டி எண் 06688/06687) போதிய வருமானம் இல்லை என்று கூறி கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில்தான் பயணிகள் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், தூத்துக்குடி - நெல்லை - தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி -திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 06688/06687) வரும் 9 ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். 6 மாதங்களுக்கு பின் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பரிசீலிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு தாழையூத்து, கங்கை கொண்டான், நாரைக்கிணறு, வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, கைலாசபுரம், தட்டப்பாரை, மீளவிட்டான், தூத்துக்குடி மேலுர் வழியாக தூத்துக்குடிக்கு காலை 9.20 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 8.25 மணிக்கு சென்றடையும். பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.25 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. பாலருவி ரயில் நீட்டிக்கப்பட்ட உடன் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி - நெல்லை ரயில் மீண்டும் இயக்கப்பட இருப்பது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications