ஆரம்பமே...அட்டகாசம், அமர்களம்.. என் கே பி படத்திற்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
சென்னை: நேர்கொண்ட பார்வை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால், தியேட்டர் உரிமையாளர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்', 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித் நடித்துள்ளார்.
யுவன்சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனையொட்டி, நேர்கொண்ட பார்வை இன்று டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதை ரசிகர்கள் சமூகவலைதளங்களிலும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்கும் விதமாக திரையரங்க வாயில்களை அஜித் கட் - அவுட்கள் ஆக்கிரமித்து வருகின்றன. விஸ்வாசம் படத்தில் மாஸ் ஆக அஜித், இந்த படத்தில் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்ப்பதாக, ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications