Meme: பெல் அடிச்சி பிரேக் பிடிச்சி போனா கொறைஞ்சா போயிடுவே.. தீபாவளிக்கு சென்னை எப்படியிருக்கும்?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் அவர்கள் கிளம்பி சென்ற பிறகு சென்னை எப்படியிருக்கும் என்பது குறித்த மீம் வைரலாகி வருகிறது.
டவுன்கள், கிராமங்களில் இயற்கை எழிலோடு வாழ்ந்த மக்களுக்கு நகரத்து வாழ்க்கை என்பது சற்று வேப்பங்காயாகவே கசக்கும். எனினும் கல்வி, பணி நிமித்தமாக நகரங்களில் வாழ்வோர் தினந்தோறும் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பட்டப்பகலில் வீடு புகுந்து கொன்றால் கூட ஏன் என கேட்க நாதி இல்லாத நிலைதான் பட்டணத்து வாழ்க்கை. அபார்ட்மென்ட்களில் வேறொருவரின் துணி கொடிகளில் துணிகளை காயப்போட கூட உரிமை கிடைக்காது. இவை எல்லாவற்றை விட ஒரு கொடுமை உள்ளது.

5 கி.மீ. தூரம்
அதாவது போக்குவரத்து நெரிசல்... 5 கி.மீ. தூரம் கொண்ட தூரத்தை அடைய ஒரு மணி நேரமாக கடக்கும் நிலையால் மக்கள் பட்டணத்து வாழ்க்கையை அடியோடு வெறுக்கிறார்கள். ஒரு வீட்டில் 4 பேர் இருந்தால் 4 பேருக்கு பைக், சற்று வசதியானவர்கள் என்றால் ஒரு வீட்டுக்கு 2 அல்லது 3 கார்கள், இவற்றால் காலையில் பிரெஷாக வீட்டை விட்டு கிளம்பினால் சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது ஊரில் இருக்கும் எல்லா தூசுகளும் நம் முகத்தில்தான் இருக்கும்.

தலையில் அத்தனை தூசி
தினந்தோறும் தலைக்கு குளித்தாலும் தலையில் அத்தனை தூசி! இப்படி பட்டணத்து வாழ்க்கையை பிடிக்காததற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம். ஆனால் வந்தாரை வாழ வைத்த சென்னை என்பதில் அனைவருக்குமே பெருமை உண்டு. ஒரு பெட்டிக் கடை வைத்தால் கூட பிழைத்துக் கொள்ளலாம் என்பதை புரிய வைத்தது சென்னை.

டிராபிக் ப்ரீ
இப்படிப்பட்ட சென்னையில் ஒரு நாளாவது டிராபிக் இல்லாமல் வண்டி ஓட்ட வேண்டும் என்ற ஆசை நிறைய பேருக்கு இருக்கிறது. என்னதான் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாட்களில் வாகன நெரிசல் குறைவாக இருந்தாலும் நாம் விரும்பும் ஃபீலிங் கிடைக்காது. இதற்கு ஒரே வழி சென்னையில் உள்ள மக்கள் எல்லாம் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்ற பிறகுதான்!

தீபாவளி
தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பூரா பேரும் கிளம்பினால் சென்னை மக்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து விளக்கும் மீம் ஒன்று வைரலாகி வருகிறது. சென்னையில் ஒரு சாலைகளில் ஒரு பெரியவர் சைக்கிளில் இரு கைகளையும் நீட்டியபடியே ஜாலியாக பயணிக்கிறார்.

பெல் அடிச்சி
அதில் வடிவேல் காமெடியான பெல் அடிச்சி பிரேக் பிடிச்சி போனா கொறைஞ்சா போயிடுவே! ஏன்டா பழைய சைக்கிளுக்கு பொறந்தவனே! கையில மாட்டுன அக்குவேறு ஆணிவேறாகிடுவே! நாங்கள் பல வெட்டுக் குத்துகளை பார்த்தவங்க! டேய் நில்லுடா" என்ற வசனம் ஒலிப்பரப்படுகிறது. ஆயினும் ஹேப்பி இன்று ஒரு நாள் ஹேப்பி என்பதை போல் அந்த பெரியவர் சைக்கிளில் செல்கிறார்.












Click it and Unblock the Notifications