“மார்க்” மேட்டரே இல்ல.. பெயிலாகி, கம்மி மார்க் எடுத்தும் நல்லா இருக்கோம்! மாணவர்களே இதை படிங்க
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் அதே நேரம், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ட்விட்டரில் இதனை தொடங்கி வைத்தவர் செந்தழல் ரவி. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வசித்து வரும் இவர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலை எழுதி இருக்கிறார். இவர் நேற்று வெளியிட்ட பதிவில், "என்னுடைய +2 மதிப்பெண் 751 தான். மதிப்பெண் குறைவாக இருந்தால் மறுபடி எழுதிக்கலாம், இல்லை அந்த மதிப்பெண்ணுக்கு என்ன கிடைக்குமோ அந்த படிப்பை படிச்சுக்கலாம்.

அதனால் ஸ்டிரெஸ் ஆகாமல் ஜாலியா இருங்க. உங்க மதிப்பெண்ணை ரிப்ளை அல்லது குவோட் பண்ணி சொல்லி குறைந்த மதிப்பெண் எடுப்பதை நார்மலைஸ் பண்ணுங்க." என்று பதிவிட்டு இருந்தார். அவரது பதிவுக்கு கீழே பல்வேறு தரப்பினரும் மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கருத்திட்டு வருகிறார்கள்.
கவாஸ்கர் என்பவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "நான் தமிழ் மீடியம். 12 ஆம் வகுப்பு 1200 மதிப்பெண்னுக்கு 631 மட்டுமே எடுத்தேன். ஆனால், இன்று நெதர்லாந்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். மிகப்பெரிய 10 நிறுவனங்களுக்கு உதவி வருகிறேன்." என்று பதிவிட்டு இருக்கிறார். தில்சன் என்பவர், "நான் 1200 க்கு 690 மதிப்பெண்களை எடுத்தேன். வேலைக்கு மதிப்பெண்கள் முக்கியமில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஞானசீலன் என்ற நபர் ட்விட்டரில், "நான் 1200 க்கும் 821 மதிப்பெண்களை எடுத்தேன். மெக்சிகோவில் மாத சம்பளம் மற்றும் ஸ்காலர்ஷிப்புடன் பிஎச்டி படிப்பை நிறைவு செய்து உள்ளேன். எனவே நம்பிக்கையை எப்போதும் இழக்காதீர்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். முகில் என்ற நபர், "நான் 880 மதிப்பெண்களை பெற்றேன். தற்போது கனடாவில் எனது வேலை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. F500 நிறுவனத்தில் திட்டம்/போர்ட்ஃபோலியோ மேலாண்மை பிரிவில் 20 ஆண்டுகளாக பணியில் உள்ளேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
கல்விநாதன் என்பவர், "என்னுடைய +2 மதிப்பெண்கள் 631. எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கியம் பயின்று எனது 23 வது வயதில் அரசுப் பள்ளி ஆசிரியராகி இன்று ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். மதிப்பெண்கள் மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிக்காது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
மற்றொரு நபர், "621 மதிப்பெண்களை எடுத்தேன். 37 மதிப்பெண்களை எடுத்து கணக்கில் தோல்வி. துணைத் தேர்வில் 27 மதிப்பெண்களை எடுத்து மீண்டும் தோல்வி. 10 வது மதிப்பெண்ணை வைத்து ECE டிப்ளமோ படித்தேன். ரயில்வே தேர்வுகளில் வெற்றிபெற்றேன். 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இணையான ஊதியத்தை பெற்று வருகிறேன். குறைந்த மதிப்பெண்களை எடுப்பதோ, தோல்வியடைவதோ எந்த வகையில் நாம் உயரத்தை எட்டுவதை தடுக்காது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாலா என்ற நபர், "நான் 1200க்கு 656 மதிப்பெண்களை பெற்றேன். ஒரு தேர்வில் தோல்வியடைந்தேன். 15 நாட்களில் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து MCA படித்து முடித்தேன். தற்போது வளைகுடாவில் உள்ள பெரிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இளையராஜா என்பவர், "நான் 657 மதிப்பெண்களை மட்டுமே எடுத்தேன். இப்போது ஆசியாவிலேயே பெரிய வங்கி ஒன்றில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வருகிறேன்." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications