அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ஒற்றை வரி ட்வீட்- ஒரே ஒரு போட்டோ- அனலடிக்கும் சோசியல் மீடியா!
சென்னை: "#என்றென்றும்_அதிமுககாரன்... " என்ற தலைப்பில் திடீரென அதிமுக கொடி கட்டிய சைக்கிளில் செல்லும் பழைய போட்டோ ஒன்றை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைமையுடனான மோதலைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியை முறித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அறிவித்தது. ஆனால் இது ஒரு அரசியல் நாடகம் என திமுக கூட்டணிக் கட்சிகள் விமர்சித்தன.

இருப்பினும் 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெறாமல் தனி கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கும் என அக்கட்சி துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி அறிவித்தார். பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதை அக்கட்சித் தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.
அதிமுகவை சமாதானப்படுத்தும் முயற்சிகள்: இதனிடையே அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் அதிமுக- பாஜக இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சித்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. அதேபோல அதிமுக -பாஜக கள நிலவரம் தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர் ஒருவரிடம் டெல்லி பாஜக மேலிடம் அறிக்கை கேட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

எஸ்பி வேலுமணி திடீர் ட்வீட்: இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தம்முடைய எக்ஸ் பக்கத்தில் "#என்றென்றும்_அதிமுககாரன்" என்ற தலைப்பில் சைக்கிளில் அதிமுக கொடி கட்டி ஊர்வலமாக செல்லும் பழைய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
எதற்காக இந்த ட்வீட்?: பாஜகவுடனான கூட்டணியை முறிக்கும் தீர்மானத்தை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியைத்தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாசிக்க சொல்லியிருந்ததாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன. அத்துடன் பாஜக கூட்டணியை முறிப்பதாக செய்தியாளர்களிடம் கேபி முனுசாமி அறிவித்த போதும் உடன் இருந்தார் எஸ்.பி.வேலுமணி. இந்நிலையில் தற்போது "#என்றென்றும்_அதிமுககாரன்" என அவர் எக்ஸ் பக்கத்தில் பழைய போட்டோவுடன் பதிவிட்டிருப்பது ஏன் என்பதுதான் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications