வருது! வருது!.. தமிழ்நாடு டூ ஆந்திரா.. புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
சென்னை: தமிழ்நாடு - ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை அமையும் 126 கி.மீ. தூரம் இந்த சாலை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை - பெங்களூர், பெங்களூர் - மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.
சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் பெங்களூர் முதல் சென்னை வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் மார்ச் 2024-க்குள் தயாராகிவிடும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தமிழ்நாடு - ஆந்திரா இடையே
8 வழிச்சாலையாக அமையும் பெங்களூர் முதல் சென்னை வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை மொத்தம் 262 கி.மீ நீளம் கொண்டது. கர்நாடகாவில் 71 கி.மீட்டரும், தமிழகத்தில் 106 கி.மீட்டரும், ஆந்திராவில் 85 கி.மீட்டரும் நீளம் கொண்டதாக இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை திட்டம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு - ஆந்திரா இடையே புதிய 6 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
6 வழிச்சாலைக்கு அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை அமையும் 126 கி.மீ. தொலைவுள்ள 6 வழிச்சாலைக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. ஆந்திராவில் 82 கிலோமீட்டரும் தமிழ்நாட்டில் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அமைகிறது. சென்னை - பெங்களூரு விரைவுச் சாலையை ஆந்திர மாநில சித்தூருடன் இணைக்கும் வகையில் இந்த புதிய 6 வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள்
மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜானா திட்டத்தின் கீழ் ரூ.3,840 கோடி மதிப்பீட்டில் இந்த ஆறு வழிச்சாலை அமைய உள்ளது. இந்த ஆறு வழிச்சாலை அமைக்க 850 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 309 ஹெக்டேர் நிலமும் ஆந்திராவில் 541 ஹெக்டேர் நிலமும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆறு வழிச்சாலையில் 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள் கட்டப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சாலையில் 100 கி.மீட்டர் வேகத்தில் வாகனங்கள் பயணிக்க முடியும்.
86 ஏக்கர் நிலம்
இந்த சாலை அமைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் புலிக்குன்றம் காப்புக்காட்டில் 86 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தபப்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும் பணி நிமித்தமாகவும் தொழில்கள் மற்றும் கல்வி நிமித்தமாகவும் வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுபோக சரக்கு போக்குவரத்தும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக அமைய இருக்கும் இந்த சாலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயன் அளிக்கக் கூடியதாகவும் தொழில் வளர்ச்சிக்கும் உதவும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.