இப்படியாக சீமான் பொய் சொல்லலாமா? ஜி20 விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே பங்கேற்றாரா?புது சர்ச்சை!
சென்னை: டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டிய விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே பங்கேற்றதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இந்த ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு அங்கமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருந்து வழங்கினார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து கை குலுக்கினார். அப்போது பிரதமர் மோடி உடன் இருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: ஒரு பக்கம் சனாதனத்தை எதிர்த்துக் கொண்டு டெல்லியில் போய் சமாதானம் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். சனாதனத்தின் உருவமாக இருப்பது பிரதமர் மோடி. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பிதழ் தரவில்லை. மமதா பானர்ஜி போனாரா? எந்த மாநில முதல்வரும் போகாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் மட்டும் ஏன் போக வேண்டும்? தென் மாநில முதல்வர் யாருக்கும் அழைப்பும் இல்லை- யாரும் போகவும் இல்லை.. நீங்கள் ஏன் போனீர்கள்?. இவ்வாறு சீமான் கூறினார்.
இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடுகிறது. டெல்லியில் ஜி 20 விருந்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின், ஜோ பைடனுடன் கை குலுக்கும் போது ஹேமந்த் சோரனும் அருகே இருந்தார். நிதிஷ்குமாரும் ஜோ பைடனை சந்தித்தார். காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சிபிஎம் முதல்வர் பினராயி விஜயன் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. ஆனால் காங்கிரஸின் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகுவும் விருந்தில் பங்கேற்றிருந்தார். இப்படி இருக்க ஏன் சீமான் அப்பட்டமான பொய்யை தேர்தல் பிரசாரம் போல செய்கிறார் என்பதுதான் விமர்சனம்.












Click it and Unblock the Notifications