தமிழகத்தில் புகுந்த புதிய வகை கொரோனா.. வேகமாக பரவுவமாம்.. வேக்சினுக்கு வேலை செய்யுமா? புது தகவல்
சென்னை: இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய NB.1.8.1 வேரியணட் வேகமாகப் பரவவும் வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில காலமாகவே கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா பேரழிவில் இருந்து நாம் மெல்ல மீண்டு வந்திருந்த நிலையில், மீண்டும் வைரஸ் பரவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவிலும் கூட பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் இப்போது புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஒருவருக்கு NB.1.8.1 வேரியண்ட் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேருக்கு LF.7 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரு வேரியண்டுகளையும் உலக சுகாதார அமைப்பு கண்காணிக்கப்படும் வேரியண்டுகளாக அறிவித்துள்ளன. இந்த இரு வேரியண்டுகளின் செயல்பாடுகளை உலக சுகாதார மையத்தின் ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதேநேரம் இவை ஆபத்தை உண்டாக்கும் வேரியண்டுகளாக அறிவிக்கப்படவில்லை. இப்போது சீனா உட்பட ஆசியாவின் பெரும்பகுதியில் கொரோனா அதிகரிக்க இந்த வேரியண்டு தான் காரணமாக இருக்கிறது. இதனால் இதை ஆய்வாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் புதிய வேரியண்ட்
இந்தியாவில் கொரோனா மாறுபாடுகளைக் கண்காணிக்கும் INSACOG அமைப்பே NB.1.8.1 மற்றும் LF.7 கண்டறியப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் ஒருவரிடம் இருந்து சேகிக்கப்ட்ட மாதிரியில் NB.1.8.1 வேரியண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதம் குஜராத்தில் நான்கு பேருக்கு LF.7 கேஸ்கள் கண்டறியப்பட்டன.
இப்போது இந்தியாவில் அதிகம் பரவும் கொரோனா வேரியண்டாக JN.1 இருக்கிறது. நமது நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படுவோரில் 53% பேருக்கு இந்த வகை தொற்றே கண்டறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து 26% பேருக்கு BA.2 வகையும் 20% பேருக்கு ஓமிக்ரான் துணை வேரியண்டும் கண்டறியப்படுகிறது.
வேகமாக பரவும்
தமிழகத்தில் இப்போது கண்டறியப்பட்டுள்ள NB.1.8.1 பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த வேரியண்டில் உள்ள புரதத்தில் கணிசமான மாற்றங்கள் தென்படுகிறது. இதனால் இந்த கொரோனா வேரியண்டால் வேகமாகப் பரவ முடியும். மேலும், மற்ற வேரியண்டுகளை காட்டிலும் இவை தடுப்பூசியில் இருந்தும் தப்பிக்க வாய்ப்பு அதிகம்.
இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், ஐசிஎம்ஆர் மற்றும் பிற முக்கிய சுகாதார மையங்களின் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
பயப்படத் தேவையில்லை
அதேநேரம் இப்போது பரவும் கொரோனா வைரஸை கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இவை சாதாரண வைரஸ் தொற்று மாதிரியே இருக்கும் என குறிப்பிடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவது போன்ற பழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். மேலும், இப்போது அரசு சார்பில் வேக்சின் போட அறிவுறுத்தவில்லை. இருப்பினும், சில மருத்துவர்கள் மீண்டும் வைரஸ் பரவுவதால் இணை நோய் இருப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேக்சின் போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications