முல்லைப் பெரியாறு விவகாரம்.. தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது - தமிழக அரசு அதிரடி!
சென்னை: முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் பராமரிப்பை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: நாளை வாக்குப்பதிவு: 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிமன்றம்
முல்லை பெரியாறில் 142 அடி நீரை அணையில் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை மறு சீராய்வு செய்ய கேரள அரசு மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படிதான் தற்போதுவரை முல்லைப் பெரியாறு அணை செயல்படுகிறது. இதற்கு கேரளா ஒத்துழைக்கவில்லை.
புதிய அணை
கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் கான் ஆற்றிய உரையில், ''கேரள மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதே சமயம், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அணை
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது'' என்று ஆளுநர் தெரிவித்தார்.
துரைமுருகன்
கேரள ஆளுநரின் இந்த அறிவிப்பை அடுத்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.
உறுதி
உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது. இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது'' என்று தெரிவித்துள்ளார்.