Tambaram: தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய Over Bridge! எப்போது திறப்பு? என்னென்ன வசதிகள் தெரியுமா?
தாம்பரம்: சென்னை புறநகர் மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழும் தாம்பரம் (Tambaram) ரயில் நிலையத்தில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய நடைமேம்பாலம் (New Foot Over Bridge) மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாவது ரயில் முனையமாக #தாம்பரம் அறிவிக்கப்பட்ட பிறகு, இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
சுமார் ₹24 கோடி மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தில், பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விசாலமான பாலம்: இந்தப் புதிய நடைமேம்பாலம் 8 மீட்டர் அகலம் கொண்டதாக அமைகிறது. இதனால் கூட்ட நெரிசலின்றிப் பயணிகள் வசதியாகச் செல்ல முடியும்.
எஸ்கலேட்டர் வசதி: முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமமின்றி ஏறிச் செல்ல, 10 நகரும் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கப்படவுள்ளன.
லிஃப்ட் வசதி: இதுதவிர, கனமான உடைமைகளுடன் வரும் பயணிகளுக்காக 9 லிஃப்டுகளும் (Lifts) பொருத்தப்படவுள்ளன.
இணைப்பு: இந்தப் பாலம் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை நேரடியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் திறப்பு!
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வரும் மார்ச் மாதம் (March 2026) இந்தப் பாலம் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர ரயில்களில் செல்லும் பயணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் புதிய பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமேம்பாலத்தால் அனைத்து ரயில் நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் செல்ல வழி பிறக்கும். படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் சிரமம் குறைவதால், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் பயணிப்போர் பெரிதும் பலன் பெறுவர். மேலும், தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் ஏற்படும் நெரிசல் குறையும். ரயில் நிலையத்தின் இருபுற பகுதிகளையும் சிரமமின்றி கடக்க இது வசதி அளிக்கும்.
ரயில் நிலையத்தில் தற்போதுள்ள நடைமேம்பாலம் பயணிகளுக்குப் போதுமான வசதிகளை வழங்குவதில்லை. கிழக்கு மற்றும் மேற்குப் பக்க நுழைவாயில்களில் மட்டுமே லிஃப்ட் உள்ளதால், மற்ற நடைமேடைகளுக்கும், வாகன நிறுத்துமிடங்களுக்கும் செல்லப் பயணிகள் படிக்கட்டுகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இது வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணிப்போர் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சிரமங்களைப் போக்க புதிய நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications