சென்னையிலிருந்து கொரோனாவை விரட்ட புது பிளான்.. களத்தில் குதித்த, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன்
சென்னை: சென்னையிலிருந்து கொரோனாவை விரட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை, ராயபுரம் பகுதியில், கொரோனா பாதிப்பு அதிகம். இந்த நிலையில்தான், விஜயபாஸ்கர், கொரோனா சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், ராயபுரம் பகுதியில் ஸ்பாட் விசிட் செய்தனர்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் கூறியதாவது: சென்னையிலிருந்து கொரோனாவை விரட்ட, சில நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். 100 புதிய மருத்துவர்கள் சென்னை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதே அளவுக்கான செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில், மாநகராட்சியில் புதிதாக 500 சுகாதாரப் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், களத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்பது முக்கியமானது. அதில் கவனம் செலுத்துகிறோம்.

விட்டமின் மாத்திரை
ராயபுரம் பகுதியில் சத்து மாத்திரைகள் (விட்டமின்) வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறோம். மக்கள் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஏற்கனவே இங்கே தீவிரமாக மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஊக்கமளிக்கும் வகையில் நாங்கள் நேரடியாக களத்திற்கு வந்து மேற்பார்வையிட்டு வருகிறோம்.

சென்னையில் பரிசோதனை
சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகிறோம். அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாகும். பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம். சென்னையிலிருந்து கொரோனாவை விரட்ட மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சத்து மாத்திரை, கபசுர குடிநீர், கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இவைதான் இப்போதைய வியூகம்.

யாருக்கெல்லாம் பரிசோதனை
சுவாச கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் பரிசோதனை எடுக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எல்லைகளில் செக்போஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் பரிசோதனை நடைபெறுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு அங்கேயே பரிசோதனை செய்து உடனடியாக தனிமைப்படுத்தி விடுகிறோம்.

மகளிர் நலன்
நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்கிறோம். ரயில்களில் வருவோரை பரிசோதனை செய்கிறோம். பேறுகால மகளிருக்கு குழந்தை பிறப்புக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக பரிசோதனை செய்கிறோம், இதுதான் பரிசோதனை புரோட்டாகால். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications