கிறுகிறுக்க வைக்கும் கிளாம்பாக்கம்..பெருங்களத்தூர் தாண்ட முடியுமா?சென்னை மக்களுக்கு புதிதாக சிக்கல்?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்போது உள்ள சூழலில் திறக்கப்பட்டால் சென்னை மக்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி காய்கறி சந்தையும் அமைந்துள்ளது. அண்ணா நகர், திருமங்கலம், வில்லிவாக்கம் , வடபழனி, விருகம்பாக்கம் என கோயம்பேட்டை சுற்றி சென்னையின் முக்கிய பகுதிகள் உள்ளது.. சென்னையில் கிண்டிக்கு இந்த பக்கம் உள்ள எல்லா மக்களும் கோயம்பேட்டில் போய் ஏறி வருகிறார்கள்.

கிண்டிக்கு பிறகு உள்ள பகுதி மக்கள் அப்படியே பேருந்துகள் வரும் வழியிலேயே அதாவது ஆலந்தூர் தொடங்கி மீனாம்பாக்கம், பல்லாவரம். குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை அத்தனை பகுதி மக்களும் ஆங்காங்கே ஏறிக்கொள்ள முடியும்.ஓஎம்ஆர் பகுதி மக்கள். வேளச்சேரி பகுதி மக்கள், சோழிங்கநல்லூர் பகுதி மக்கள் குரோம்பேட்டையில் அல்லது தாம்பரத்தில் ஏறிக்கொள்ள முடியும்.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னையின் ஒட்டுமொத்த மக்களுமே தாம்பரம், கிண்டியை கடந்து போய் தான் பேருந்தில் ஏற வேண்டும். திருவான்மியூர் தொடங்கி ஆவடி வரை யாராக இருந்தாலும் கண்டிப்பாக தாம்பரத்தை கடந்து தான் கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்.
வயதானவர்கள், பெண்கள், சிறார்களை அழைத்துக் கொண்டு கிளாம்பாக்கம் வரை செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பல்வேறு லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 25 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் டவுன் பஸ்ஸில் பயணித்து சென்றால் தான் கிளாம்பாக்கம் போக முடியும்.
லக்கேஜ்களுடன் அப்படி செல்ல அனைவராலும் முடியாது. அவ்வளவு தூரம் சொந்த வாகனத்தை பயன்படுத்தவும் முடியாது. கால் டாக்ஸியில் போக வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையை கட்டணமாக சென்னை மக்கள் செலுத்த வேண்டியதிருக்கும். கிட்டத்தட்ட சென்னையில் இருந்து மதுரைக்கு போகும் பஸ் கட்டணத்தையே காருக்காக செலவழிக்க வேண்டியதிருக்கலாம்.
அதேநேரம் ரயிலில் செல்லலாம் என்றால் அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவே இல்லை. ஊரப்பாக்கம் அல்லது வண்டலூரி இறங்கி கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்தோ அல்லது ஆட்டோவோ பிடித்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் ரயில் நிலையம் இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்படவில்லை. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைத்து அவை திறக்கப்பட்டால் மட்டுமே ஓரளவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஜிஎஸ்டி சாலையும் இணையும் இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை திறந்தால் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக இருக்கும்..
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவர் கிளம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்டால், அங்கிருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அழைத்துக் கொண்டு லக்கேஜை எடுத்துக் கொண்டு கிளம்புவது சாதாரணமான விஷயம் அல்ல. அத்துடன் அதற்காக அவர் அதிக அளவு பணத்தை செலவு செய்ய வேண்டியதிருக்கும். நேரமும் அதிகமாகும். சென்னைக்கு வருவதை விட, சென்னைக்குள் வருவது சிக்கல் ஆகாத அளவிற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வடிவமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்கும் முன்பு அந்த பகுதியில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளையும் அகலப்படுத்த வேண்டும். தாம்பரம் வரை செல்லும் அத்தனை டவுன் பேருந்துகளையும் கிளாம்பாக்கம் வரை கண்டிப்பாக நீடிக்க வேண்டும். புதிதாக கிளாம்பாக்கத்திற்கு ஏராளமான பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னையில் இருந்து பேருந்து ரயில் ஆகியவற்றால் முழுமையாக இணைக்கப்பட்டால் தான் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக கிளாம்பாக்கம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.மாறாக அவசர கதியில் திறந்தால் அது சென்னை மக்களுக்கு பெரும் சிக்கலையே தரும் என்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் கோயம்பேட்டில் உள்ளது போல் அனைத்து தரமான அடிப்படை வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு பணிகளும், கிளாம்பாக்கத்தில் சிறப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் பெருங்களத்தூரை தாண்டி வந்து சென்னை மக்கள் பேருந்தில் ஏற முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications