புதிய ரேஷன் கார்டு குறித்து ஷாக் தந்த அதிகாரிகள்.. தமிழகத்தில் நிலைமை வேறமாதிரி இருக்கே
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த பலர் குடும்ப அட்டை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என்றுஅறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த நிலையில், சுமார் இரண்டரை வருடங்களுக்கு பின்னர், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது மாதத்தவணை கடந்த அக்டோபர் 14ம் தேதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் காரணமாக கூட்டுக் குடும்பமாக இருந்த பலர், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் திடீரென ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. கலைஞர் மகளிர் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே புதிய ரேஷன் கார்டு வழங்குவது நின்றுவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாய் திருமணம் ஆனவர்கள் உடனே ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்க தொடங்குவார்கள். ரேஷன் கார்டு இருந்தால் தான் குடும்பத்திற்கு தேவையான விலையில்லா அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை, பச்சரிசி போன்றவற்றை குறைந்த விலையில் பெற முடியும். இது மட்டுமின்றி அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு இருப்பதால், அது இல்லாமல் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவது உள்பட பல்வேறு விஷயங்களுக்கு சிக்கல் ஏற்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோக திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. அரசு தரும் ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காரணமாக கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள் பலன் அடைந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அட்டைக்கு விண்ணப்பித்த 30 நாளில் பொதுவாக ரேஷன் கார்டு (ரேஷன் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் தற்போது குடியிருந்து வரும் முகவரியில் புதிய குடும்ப அட்டை நகலை வெறும் ரூ.25 செலுத்தி பெற்று கொள்ளலாம்.இந்த அட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் ரேஷன் கார்டை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற முடியும்.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் காரணமாக புதிய ரேஷன் கார்டு வரும் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமை திட்டம்செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தவர்கள், முகவரி மாற விண்ணப்பித்தவர்களுக்கு நகல் அட்டை வழங்கப்படுகிறதாம். ஆனால் புதிய குடும்ப அட்டை கேட்டுவிண்ணப்பித்தவர்களுக்கு தகுதி இருதும் இன்னமும் புதிய ஸ்மார்ட் கார்டுகளை அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே வட்ட வழங்கல் துறை வட்டாரங்கள் கூறும் போது, "கடந்த ஜூலை மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு இனி வரும் நாட்களில் பலரும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது, ஒரே கதவு எண்ணில் பலர் புதிதாக விண்ணப்பங்கள் வருகிறது. உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1,500 முதல் 2,000 குடும்ப அட்டைகள் கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளார். சென்னையில் வழக்கத்தை விட அதிக அளவு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். தற்போது பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை செய்து வருகிறோம். புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி இன்னமும் தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் இருக்கிறது. விரைவில் தமிழக அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்கள்.












Click it and Unblock the Notifications