தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்.. தடை & விதிவிலக்குகள் என்னென்ன? யாருக்கு இபாஸ் தேவை?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,81,988 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
2ஆம் அலை மிக மோசம்... 15 கோடியை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு... உயிரிழப்புகளும் அதிகரிப்பு
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் இரவு ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனுமதி இல்லை
இந்தப் புதிய கட்டுப்பாடுகளின்படி மாநிலத்திலுள்ள திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை. அதேபோல பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மேலும், சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
செயல்பட அனுமதி
மளிகை, காய்கறி கடைகள், இதர அனைத்து கடைகளும் உரிய கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல சரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தக் கடைகளில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி
அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. அதேநேரம் உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து மின் வணிக சேவைகள் (இ காமர்ஸ்) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து
பொது போக்குவரத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே தொடரும். அதாவது தனியார் மற்றும் அரசு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். ஆனால் அதேநேரத்தில் பேருந்துகளின் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்கள்
மாநிலத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சிகளுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தால் அல்லது முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்திருந்தால், 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாகக் குடமுழுக்கு அல்லது திருவிழா நடத்த அனுமதி இல்லை.
திருமணங்களுக்குக் கட்டுப்பாடுகள்
மேலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே (Work From Home) கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.
இபாஸ் கட்டாயம்
புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். அதேபோல வெளிநாட்டிலிருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் வருபவர்களுக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.