டாஸ்மாக் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.. இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.. ஞாயிறுகளில் விடுமுறை
சென்னை: வரும் 20ஆம் தேதி முதல் மாநிலத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பும் தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி திருமண நிகழ்வுகள், திரையரங்கங்கள், கடைகள் ஆகியவை செயல்படவும் மாநில அரசு நேரக்கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அதில் டாஸ்மாக் கடைகள் இயங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் சற்று குழப்பம் நிலவியது.
இதையடுத்து தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் டாஸ்மாக் கடைகளும் பொருந்தும் எனத் தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications