“ஜாக்கிரதை”.. கார்டு மேல 16 நம்பர் பழசு.. ஏடிஎம் கார்டையே அனுப்பி ஆட்டையப்போடுறது புதுசு -என்னாச்சு?
“யாருக்காவது இதுபோல் போன் வந்தால் உங்கள் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று உங்கள் வங்கிக்கணக்கை காப்பாற்றிக் கொள்ளுங்கள். இதுபோல் ஏமாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். நன்றாக தெரிந்தவர்போல் பேசுகிறார்கள்.”
சென்னை: வங்கி கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டை அனுப்பி மேலாளர்போல் பேசி விபரங்களை கேட்டு மோசடி செய்யும் கும்பல் தற்போது கிளம்பி இருக்கிறது. இதுபோன்று தனக்கு வந்த அழைப்பு குறித்து ஒருவர் பேசி வெளியிட்டு இருக்கும் ஆடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அறைகுறை தமிழில் பேசும் நபர், தன்னை வங்கியின் மேலாளர் என்று அறிமுகப்படுத்தி ஏடிஎம் அட்டையின் மேல் இருக்கும் 16 எண்களை கேட்டு மோசடி செய்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு பலர் பல லட்சக்கணக்கான பணத்தை இழந்து இருக்கும் நிலையில் தற்போது, ஏடிஎம் கார்டையே வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பி வைத்து நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கி உள்ளார்கள்.

வாட்ஸ் அப் ஆடியோ
இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வெளியிட்டு இருக்கும் ஆடியோவில், "இந்தியன் வங்கி அண்ணா சாலை கிளையில் இருந்து ஒரு ஏடிஎம் கார்டு எனக்கு தபாலில் வந்தது. நான் ஏடிஎம் கார்டு வேண்டும் என்று விண்ணப்பிக்கவே இல்லை. என்னுடைய ஏடிஎம் கார்டு 2026 ஆம் ஆண்டுதான் காலாவதியாகும்.

தபாலில் வந்த ஏடிஎம் கார்டு
நான் ஏடிஎம் கார்டு வேண்டும் என்று கேட்கவே இல்லை. நான் அதை வாங்கிக்கொண்டு பேசாமல் வைத்துவிட்டேன். காலை, இந்தியன் வங்கி அண்ணா சாலை கிளை மேலாளர் ரவிக்குமார் என்று கூறி ஒரு அழைப்பு வந்தது. 'உங்களுக்கு ஏடிஎம் கார்டு அனுப்பினோம். வந்ததா?' என்று கேட்டார். வந்துவிட்டது என்று சொல்லி போனை வைத்துவிட்டோம்.

மோசடியை தடுக்கவாம்
மீண்டும் அவர் எனக்கு போன் செய்தபோது, நான் ஏடிஎம் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லையே. எனக்கு ஏன் அனுப்பினீர்கள்? என்று கேட்டேன். ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நிறைய பேர் திருடுகிறார்கள். அதில் இருந்து பாதுகாக்க புதிய ஏடிஎம் கார்டை அனுப்பி இருக்கிறோம்.' என்றார். 'எனக்கு ஏடிஎம் கார்டு தருவதாக இருந்தால் எங்கள் கிளை அருகில்தான் இருக்கிறது.

எல்லா விபரமும் தெரியும்
அங்குள்ள மேலாளர் எனக்கு தெரிந்தவர்தான். அந்த வங்கி கிளை மூலமாகவே கொடுத்திருக்கலாமே?' என்று கேட்டேன். தமிழ்நாடு முழுவதும் இதை என்னிடம் செய்ய சொல்லி இருக்கிறார்கள். என்றார். என்னுடைய முகவரி, வங்கி கணக்கு விபரம் எப்படி தெரியும் என்று கேட்டேன். எல்லாமே தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.

பழைய ஏடிஎம்
என்னுடைய வங்கி விபரங்கள் என்னவென்று கேட்டேன். அவர் எனது அக்கவுண்ட் நம்பர், IFSC எண், வங்கி கிளை என அனைத்தையும் சொல்கிறார். அத்துடன், நான் ஆக்டிவேசன் செய்துவிடுகிறேன். உங்களுக்கு ஓடிபி வரும். அதை சொல்லுங்கள் என்றார். பழைய கார்டு இருக்கிறதே என்று சொன்னேன். இதை ஆக்டிவேட் செய்தவுடன் பழைய கார்டு செயழிலந்துவிடும் என்றார்.

ஓடிபியை சொல்லாதீங்க
நான் ஓடிபியை சொல்லவில்லை. நான் சொல்லி இருந்தால் என் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து இருப்பார்கள். இதுமாதிரி நூதனமாக ஏடிஎம் கார்டு கொடுத்து ஆக்டிவேசன் செய்வதற்காக ஓடிபி கேட்கிறார்கள். தயவு செய்து சொல்லிவிடாதீர்கள். நான் வங்கி கிளையிடம் நேரில் சென்று விசாரித்தேன்.

நல்லவர்போல் பேசி மோசடி
இதுபோல் புதிதாக ஏடிஎம் கார்டை யாருக்கு அனுப்பவில்லை என வங்கி கிளை மேலாளரே என்னிடம் சொல்லிவிட்டார். தயவு செய்து யாருக்காவது இதுபோல் போன் வந்தால் உங்கள் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று உங்கள் வங்கிக்கணக்கை காப்பாற்றிக் கொள்ளுங்கள். இதுபோல் ஏமாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். நன்றாக தெரிந்தவர்போல் பேசுகிறார்கள். யாரும் ஏமாற வேண்டாம்." என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications