நியூஇயர்!வெளியே வரலாம், ஆனா வரக்கூடாது.. டிஜிபி & அமைச்சர் நேர்மாறான கருத்து.. குழம்பும் பொதுமக்கள்!
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து தமிழ்நாடு போலீசும் அமைச்சர் சேகர்பாபுவும் கூறியுள்ளது நேர்மாறாக உள்ளதாகப் பலரும் சாடி வருகின்றனர்.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு, கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 16,764 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் மழை.. தேங்கிய மழைநீர்.. மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு.. மக்களே உஷார்
ஓமிக்ரான் பாதிப்பும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுவரை நாட்டில் 1270 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தில் இதுவரை 45 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் 890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் மாநிலத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 6,929 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தலைநகர் சென்னையில் மட்டும் 397 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
மத்திய அரசு
கடந்த டிசம்பர் முதல் வாரம் தலைநகர் சென்னையில் 1088 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இது டிச. 2ஆம் வாரம் 987ஆகக் குறைந்திருந்தது. இருப்பினும், 3ஆம் வாரம் இது 1039ஆக உயரத் தொடங்கியது. குறிப்பாக இந்த கடைசி வாரம் 1720 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் அச்சம் காரணமாக விடுதிகள், ஹோட்டல்களில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் போக்குவரத்து தடை
அதேபோல தலைநகர் சென்னையிலும் இன்று (டிச. 31) இரவு 12 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய போக்குவரத்துகளைத் தவிரப் பிற போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பயணங்களை 12 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு நேற்றைய தினம் கேட்டுக் கொண்டிருந்தார்,
அமைச்சர் கருத்து
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இப்படிப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ள கருத்துகளை இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "புத்தாண்டு இரவில் கோயில்கள் திறக்க தடையில்லை. எந்தெந்த கோயில்கள் இரவு நேரத்தில் திறக்கப்படுமோ அந்தக் கோயில்கள் வழக்கம் போலத் திறக்கப்படும். அதற்குத் தடை எதுவும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் கோயில்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்து, மக்கள் மாஸ்க் அணிந்து மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
நேர்மாறான கருத்து
இதை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், அமைச்சர், புத்தாண்டு இரவில் கோயில்கள் திறக்க தடையில்லை என்று கூறுவது விநோதமாக உள்ளதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். குறிப்பாகத் தலைநகர் சென்னையில் அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களால் எப்படி கோயில்களுக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Recommended Video
டிடிவி தினகரன் தாக்கு
இதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இரவு 12.00 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டி.ஜி.பி தடை விதிக்கிறார் ; அதே நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சொல்கிறார். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்! தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை!" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.