Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிரியை பணி முதல் பாஜக செயற்குழு உறுப்பினர் வரை... சவுதா மணி ஓபன் டாக்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியை, செய்திவாசிப்பாளர், பெண் தொழில்முனைவோர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரர் சவுதாமணி.

பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்று, ஆர்வத்தின் காரணமாக தமிழ் பயின்று செய்திவாசிப்பாளராக முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் இவர்.

இந்நிலையில் தனது ஆசிரியை பணி முதல் கட்சிப் பதவி வரை ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டதன் விவரம் பின்வருமாறு;

பத்மநாபபுரம்

பத்மநாபபுரம்

தமிழகம் - கேரளா எல்லையையொட்டி அமைந்துள்ள அழகியமண்டபம் என்ற ஊர்தான் எனக்கு பூர்வீகம். நான் மலையாளியாக இருந்தாலும் சிறு வயது முதலே தமிழ்மொழி மீது ஆர்வம் இருந்துவந்தது. நாகர்கோவிலில் பி.ஏ., பி.எட் படித்துவிட்டு எம்.ஏ. படிக்க கல்லூரியில் சேர்ந்த போது எனக்கு திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு கணவரின் பணி நிமித்தம் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தோம். இங்கு எனக்கு ஆசிரியை பணி கிடைத்தது. சூளைமேட்டில் இருந்த மார்னிங் ஸ்டார் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணியை தொடங்கினேன்.

சன் டிவி நிராகரித்தது

சன் டிவி நிராகரித்தது

என்னுடன் பணியாற்றிய ஆசிரியர் நண்பர்கள் என்னை செய்தி வாசிப்பாளராக முயற்சிக்குமாறு ஊக்கப்படுத்தினர். அதன்பேரில் 1997-ம் ஆண்டு சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆடிஷன் சென்றிருந்தேன். அங்கு என்னுடன் டாப் 10 திரைவிமர்சகர் சுரேஷ்குமாரும் ஆடிஷன் வந்திருந்தார். அவருக்கு பணி கிடைத்துவிட்டது. ஆனால் எனது தமிழ் உச்சரிப்பில் மலையாள சாயல் தெரிவதாக கூறி நிராகரிக்கப்பட்டேன். ஆசிரியை பணியை தொடர்ந்தாலும் இந்த நிகழ்வை மனம் ஏற்க மறுத்தது.

3000 பேரில் 6 பேர்

3000 பேரில் 6 பேர்

இதனிடையே டோர்தர்ஷன் (பொதிகை டிவி) தொலைக்காட்சியில் 1998-ம் ஆண்டு செய்தி வாசிப்பாளருக்கு ஆட்கள் எடுப்பதை அறிந்து பள்ளியில் ஒரு மாதம் விடுப்பு எடுத்து வீட்டில் நாள் முழுவதும் செய்தி வாசித்து பயிற்சி பெற்றேன். அதை பார்ப்பவர்களுக்கு கூட வேடிக்கையாக தெரிந்திருக்கும். ஆனால் 3000 பேருக்கு நடத்தப்பட்ட தேர்வில் நான் உட்பட 6 பேர் செய்தி வாசிப்பாளராக தேர்வு பெற்றோம். பிறகு 2004-ம் ஆண்டு சன் நியூஸ் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 2009 வரை பணியாற்றினேன்.

சொந்த ஊர்

சொந்த ஊர்

2009-ம் ஆண்டு சிறுநீரக கோளாறு காரணமாக எனது கணவர் காலமானார். அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்களின் கணவர் சவுந்தரராஜன் தான் சிகிச்சை அளித்தார். உலகமே இருண்டது போன்ற சோகம் சூழ்ந்ததால் ஊடகப் பணியில் இருந்து விலகி சொந்த ஊரான அழகியமண்டபத்திற்கே சென்றுவிட்டேன். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து என்.டி.டி.வி. இந்து தமிழில் செய்தி தொலைக்காட்சி தொடங்கியபோது நல்ல ஊதியத்தில் பணியில் சேர வாய்ப்பு கிடைத்ததால் மீண்டும் ஊடகத்திற்கு வந்தேன்.

வாழ்க்கைப் போராட்டம்

வாழ்க்கைப் போராட்டம்

இன்று நல்ல நிலையில் இருந்தாலும் இந்த நிலையை அடைய பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஹோம்லோன் எடுத்து வீடுகட்டிய தருணத்தில் கணவர் காலமானதால் கடனை அடைக்க வேண்டிய கடமை எனக்கு வந்தது. இதனால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, எழுதுவது என பகுதி நேர பணிகளையும் கவனிக்கத் தொடங்கினேன். ஏளனங்கள், அவதூறுகளை கடந்து இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.

நல்ல மதிப்பெண்கள்

நல்ல மதிப்பெண்கள்

எனது இரண்டு மகள்களுமே படிப்பில் டாப் மதிப்பெண்கள் பெறக்கூடியவர்கள். மூத்த மகள் ஜெர்மனில் கல்லூரி படித்து வருகிறாள். இளைய மகள் மருத்துவம் பயில வேண்டும் என்ற லட்சியத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பில் 600க்கு 540 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மெரிட்டில் டாக்டர் சீட் வாங்கிவிடுவாள் என்ற நம்பிக்கை உள்ளது.

மதுரை அருகே

மதுரை அருகே

ஒன்றை உங்களிடம் குறிப்பிட்டு கூற விரும்புகிறேன், நான் பி.எட். முடித்து பதிவு செய்ததன் அடிபடையில் 2007-ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக போஸ்டிங் கிடைத்தது. மதுரை அருகே உள்ள ஒரு கிராமம் என நினைக்கிறேன் அங்கு தான் போஸ்டிங் ஆர்டர் கிடைத்தது. ஆனால் மீடியா உலகிற்கு வந்துவிட்டதால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதை நினைத்து இப்போது வருந்துகிறேன். என்னை போன்று போஸ்டிங் ஆர்டர் கிடைத்து 2007-ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வாங்குகிறார்கள் எனக் கேள்விபட்டேன்.

தொழில் நிறுவனம்

தொழில் நிறுவனம்

என்.டி.டி.வி. தந்தி டிவியாக மாறிய பிறகும் அங்கு பணியாற்றி வந்த நான் தொழில்முனைவோராக வரவேண்டும் என்ற உந்துதலில் அங்கிருந்து விலகினேன். இதனிடையே இயல்பாகவே பாஜகவின் கொள்கைகள், கோட்பாடுகள் எனக்கு பிடிக்கும். தந்தி தொலைக்காட்சியில் இருந்து விலகியதும் 2017-ம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தேன். கட்சிக்காக தேர்தல் பிரச்சாரங்கள் செய்திருக்கிறேன். தூத்துக்குடி, சிவகங்கை, என பல இடங்களிலும் பரப்புரையில் ஈடுபட்டேன்.

கட்சிப்பணிகள்

கட்சிப்பணிகள்

பாஜகவில் இணைந்தது முதல் கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். அதற்கான அங்கீகாரமாக மாநில செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பு கிடைத்துள்ளது. இதனிடையே தற்போது செம்பருத்தி சீரியலில் நடிக்கத் தொடங்கியுள்ளேன். சீரியல் பக்கம் செல்ல வேண்டாம் என நினைத்தேன், நல்ல ரோல் என தொடர்ந்து அழைக்கப்பட்டதால் இப்போது சீரியல் ஷூட்டிங்கிற்கும் சென்று வருகிறேன். இதனால் நேரம் பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறது என பரபரவென கூறி முடித்தார் சவுதா மணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+