என் மகன் சிம்புவின் தீவிர ரசிகர்- நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கை தீவிரவாதியின் தாயார் சரிதா
சென்னை: என் மகன் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்று நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இலங்கை தீவிரவாதி சம்சூதீனின் தாயார் சரிதா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த சம்சூதீன் ஆதில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தீவிர ஆதரவாளராக வெளிப்படுத்திக் கொண்டார். சமூக வலைதளங்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க வீடியோக்களை வெளியிட்டார்.
2016-ம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருடன் சம்சூதீன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் வீடியோக்களை வெளியிட்டதால் நியூசிலாந்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சென்னை ஆடிட்டரை கொலை செய்தது ஏன்?.. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்!
சிரியா தப்ப முயற்சி
2017-ம் ஆண்டு சிரியாவுக்கு தப்பி செல்ல முயன்ற போது ஆக்லாந்து விமான நிலையத்தில் சம்சூதீன் கைது செய்யப்பட்டார். பின்னர் 2018-ம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஜாமீன் விதிகளை மீறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஓராண்டு கண்காணிப்புக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த ஜூலை மாதம்தான் சம்சூதினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
நியூசிலாந்தில் தாக்குதல்
இந்நிலையில் ஆக்லாந்து சூப்பர்மார்க்கெட்டில் கடந்த 4-ந் தேதி பொதுமக்களை தீவிரவாதி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 7 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியது இலங்கையை சேர்ந்த தீவிரவாதி சம்சூதீன் ஆதில் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியது.
பூர்வீகம் இலங்கை
பின்னர்தான் சம்சூதீன் ஆதில் தொடர்பான தகவல்கள் வெளியாகின. சம்சூதீனின் அப்பா முகமது இஸ்மாயில், மாளிகாவத்தை பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். தற்போது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். சம்சூதீனின் சகோதரர்கள் கட்டார் மற்றும் செளதி அரேபியாவில் வசிக்கின்றனர். காத்தான்குடி கபூர் கடை வீதியில் உள்ள வீட்டில் சம்சூதினின் தாயார் சரிதா வசித்து வருகிறார். அவரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே பி.பி.சி. தமிழோசை பிரிவுக்கு சரிதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் சரிதா கூறியிருப்பதாவது; மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரியில்தான் 4-ம் வகுப்பு வரை என் மகன் படித்தார். அங்கிருந்து அடுலுகம சென்றோம். அங்கு 5-ம் வகுப்பு படித்தார். பிறகு கொழும்பு இந்து கல்லூரியில் 12-ம் வகுப்பு வரை படித்தார்.
நடிகர் சிம்பு ரசிகர்
என் மகன் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக இருந்தார். சினிமா பாடல்களை அதிகம் கேட்பார். நிறைய சினிமா படங்கள் பார்ப்பார். 2016-ல் நியூசிலாந்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கினார் சம்சூதீன் ஆதில். அப்போது அவருக்கு வெளிநாட்டு நண்பர்கள் உதவியாக இருந்தனர். அவர்கள்தான் ஆதிலுடன் நெருக்கமாக இருந்தனர். அவர்கள் சம்சூதீன் ஆதிலை மூளைச் சலவை செய்திருக்க வாய்ப்புள்ளது. என்னிடம் ஒரு முறை பேசும்போது சிரியா, ஈராக், பாலஸ்தீனத்தில் மக்கள் சாப்பாட்டுக்கும் கம்பளிக்கும் சிரமப்படுகிறார்கள். நமக்கு கார் தேவையா? என ஆதங்கப்பட்டார். இவ்வாறு சம்சூதீன் தாயார் ஆதில் கூறினார். மேலும் சம்சூதீன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அவர் என்னிடம் பேசினார். பொதுவாக எப்போதும் கடும் கோபத்தைக் காட்டக் கூடியவர். அவரது சகோதரி கனடாவில் இருக்கிறார். நான் வெளியே செல்கிறேன். வந்து உங்களை அழைக்கிறேன் என மெசேஜ் கொடுத்துவிட்டுப் போனார். அதன்பின்னர் எல்லாமும் நடந்தது என்றும் தாயார் சரிதா தெரிவித்தார்.