விவேக் மரணத்திற்கு என்ன காரணம்? 8 வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு.. தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்
சென்னை: விவேக் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்குத் தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன.
இருப்பினும், படிப்படியாக அது அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதலில் வேக்சின் குறித்து மக்களிடையே சற்று தயக்கம் இருந்தது.
நடிகர் விவேக் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்.. விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!
விவேக்
அந்த சமயத்தில் கடந்த நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்ட அடுத்த நாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சுகாதாரத் துறை
இருப்பினும், சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். விவேக்கின் மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது. தடுப்பூசி போட்ட பிறகு விவேக் உயிரிழந்ததால், இது குறித்த பல்வேறு தகவல்கள் பரவி சர்ச்சைகளைக் கிளப்பியது. இருப்பினும், கொரோனா தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்தது. நடிகர் விவேக் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும் இதே கருத்தைத் தான் தெரிவித்திருந்தது.
மனித உரிமை ஆணையத்தில் புகார்
இருந்தாலும் கூட நடிகர் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புப் படுத்தி வெளியாகும் செய்திகள் நின்றதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன், நடிகர் விவேக் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
8 வாரங்களில் அறிக்கை
நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி போடும் போது மத்திய அரசு வெளியிட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் இது குறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் சமூக ஆர்வலர் சரவணனின் புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி அது தொடர்பாக 8 வாரங்களில் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது.
Recommended Video
இந்தியா கொரோனா வேக்சின்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் ஆகிய 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பெரும்பாலும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளே இந்தியாவில் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வேக்சின் குறித்து தொடக்கத்தில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரவின. இதனால் தடுப்பூசி செலுத்த மக்கள் தயக்கம் காட்டினர். கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னரே இந்தியாவில் வேக்சின் பணிகள் வேகம் பெற்றன. இந்தியாவில் இதுவரை சுமார் 70 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா வேக்சின் போட வேண்டும் என்பதை இலக்காக மத்திய அரசு வேக்சின் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.