பாரதத் தாயின் நாவில் உள்ள மொழி என்பதால் தமிழை பிரதமர் எடுத்து சொல்கிறார்.. நிர்மலா சீதாராமன்
சென்னை: பாரதத் தாயின் நாவில் உள்ள மொழி தமிழ் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி அதை எடுத்துச் சொல்லுகிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் விழா நவம்பர் 16 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலக்கியம், ஆன்மீகம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரே பாரதம், உன்னத பாரதம் என கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சங்கமத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்த தமிழர்கள் காசிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
நேருக்கு நேர்.. மதுரை எய்ம்ஸை சீக்கிரம் கட்டி முடிங்க.. நிர்மலா சீதாராமனிடம் பட்டென கூறிய பிடிஆர்!
தமிழ்ச் சங்கம்
அந்த வகையில் காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் தமிழ் இலக்கியங்கள் திருக்குறள், புறநானூறு, அகநானூறு போன்றவற்றை ஒவ்வொரு மேடையிலும் மேற்கோள் காட்டும் போது எனக்கு புல்லரிக்கிறது. அவர் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
பழமை
ஆனால் தமிழ் என்று வரும் போது அதன் பழமையை புரிந்து கொண்டு நாட்டின் பாரதத் தாயின் நாவில் உள்ள மொழி என்பதால் அதை எடுத்துச் சொல்லுகிறார். நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனச் சொல்லுகிறார். ஆனால் இவர் இந்தியைத் திணிக்கிறார் என விமர்சிக்கிறார்கள். இந்த விதண்டாவாதம் பேசும்போது தான் நமக்குத் தோன்றுகிறது.
பழமையான கலாச்சாரம்
இப்படிப்பட்ட பழமையான கலாச்சாரத்தை நாம் அரசியல் காரணங்களுக்காக மறந்து விடுவோமா அல்லது அதை ஒத்தி வைத்துவிடுவோமா என யோசிக்கும் போதுதான் தமிழ்ச் சங்கமத்தின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மொழிக்கும் சமமான மரியாதை கொடுத்து தான் கொண்டிருக்கிறார்.
காசிக்கும் தமிழகத்திற்கும்
காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக நாம் எடுத்துச் சொல்கிறோம். நீண்ட காலமாக இசை மூலமாக எப்படி தொடர்புகளை வளர்த்தார்கள் என்பதை காசியில் நடப்பதுதான் காஞ்சியில் நடக்கிறது என்று காணும்போது உணர முடிகிறது. காசியில் இன்றும் கல்விக்கு என முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஒற்றுமை
நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் அனைவரும் ஒன்றாக இருந்தால்தான் இந்த நாடு முன்னேறும். ஏழ்மை தானாக அகலும் என்ற நமது பிரதமரின் கனவை நனவாக்க பாடுபடுவதுடன் உண்மைகளை அவர்கள் முன் எடுத்து வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.