இன்று இரவு தான் நிவர் புயல் கரையை கடக்கும்.. எப்படி இருக்கும் புயலின் தாக்கம்!
சென்னை: பொதுவாக புயல் வரப்போகிறது என்றால் அதற்கு முன்பாக கனமழை பெய்யும். புயல் நெருங்க நெருங்க அதிதீவிரமான மழை பெய்யும். அந்த வகையில் நிவர் புயல் இன்று இரவு தான் கரையை கடக்க உள்ளது. அதன் தாக்கம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கருமேகங்கள் சென்னை முதல் நாகப்பட்டினம் வரை வட்டமிடுகின்றன. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடல் தமிழகத்திற்கு பேய்மழையையும். கடும் சூறவாளிகளையும் அவ்வபோது தந்து வருகிறது. கடந்த 2015ல் அடர்மழை என்றால், 2016ல் வர்தா புயல். அவற்றால் ஏற்பட்ட பாதிப்பு சரியாக பல மாதங்கள் ஆனது. இதேபோல் 2018 நவம்பரில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை கடுமையாக காலி செய்தது. மின்சாரம் இயல்பு நிலையை எட்ட சில மாதங்கள் ஆனது.
இந்நிலையில் கஜாவைப்போல் அதிதீவிரமாக நிவர் புயல் புறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று அதிகாலை புயலாக உருவெடுத்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது கடும் சேதம் இருக்கும் என்பதால் முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளன.

நிவர் எங்கு உள்ளது
நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

அதிதீவிர புயல்
புயல் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். சில சமயங்களில் 145 கி.மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மதியம் அதிதீவிரபுயலாக மாற உள்ளது.

அதீத மழை பெய்யும்
புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் சூறாவளி காற்று வீசும் என்று தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது, அதீத மழை பெய்யும் என்பதுடன், குடிசைகள், வீடுகளின் தகரங்கள் காற்றில் பறக்கும். மரங்கள் வேறோடு சாயும். அத்துட்ன் மின்கம்பங்கள் கடுயைமாக சேதமடையவும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல் புயல் கரையை கடக்கும் போது, கடல்அலைகள் ராட்சத உயரத்தில் எழும்பி வரும் என்பதால் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர்.

புயலின் தாக்கம்
மேலும் படகுகள் கடும் சேதம் ஆகும் என்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. புயல்களால் பொதுவாக கடலோர மாவட்டங்களே கடுமையாக பாதிக்கப்படும். அந்த வகையில் கனமழையால் பயிர்களும்., சூறாவளி காற்றால் மரங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மின்சாரமும் பாதிக்கப்படும். புயல் வரப்போகும் முன்பே சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. புயல் நெருங்க நெருங்க மிக கனமழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. அதனால் தான் அரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications