கரையை கடந்த நிவர்.. ஆனாலும் விடாத "தீவிர கனமழை".. வடதமிழகத்தில் பிச்சு எடுக்கிறது.. பலத்த சேதம்!
சென்னை: நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கணித்தது படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தீவிர கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையை கடந்துவிட்டது. புதுச்சேரி - மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு புயல் கரையை கடந்தது.
அதி தீவிர புயலாக உருவெடுத்த நிவர் தற்போது கரையை கடந்துள்ள நிலையில் ஆந்திர பிரதேசம் நோக்கி வடமேற்கு திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் 1 மணி நேரத்தில் புயல் மொத்தமாக வலிமை இழக்கும்.
எப்படி
இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்த போது 140 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடந்த போது தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சேதங்கள்
புயல் மூலம் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரியும். இந்த நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். புயல் வலுவிழந்த பின்பும் கூட அதிக கனமழையை தரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மழை
வானிலை மையம் தெரிவித்தது போலவே நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மழை
சென்னை அருகே கரையை கடந்த நிலையில் இரவு முழுக்க சென்னையில் பலத்த காற்று வீசியது. தற்போது சென்னையில் தீவிர மழை பெய்து வருகிறது. கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
அதிக சேதம்
வடதமிழ்கத்தில் மழை பிச்சு எடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த புயல் காரணமாக பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சேத விவரங்கள் முழுமையாக தெரிய இன்னும் மணி நேரங்கள் ஆகும். வட தமிழகத்தில் இதனால் பலத்த சேதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.