2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி.. அன்புமணி ராமதாஸ் அதிரடி! அதிமுக கூட்டணி ஓவர்?
சென்னை : அதிமுகவின் மெகா கூட்டணியில் இருப்பீர்களா என்ற கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூசகமாக பதில் அளித்துள்ளார்.
2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம், சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதே செயல்படுத்துவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி பற்றிய விவாதங்களும் எழுந்துள்ளன.
அந்தவகையில், குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி கொண்ட பாமக, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் நிலவி வருகிறது.
2026ல் பாமக ஆட்சி
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இருப்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கு ஏற்ற வியூகங்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதே செயல்படுத்துவோம், அதை நோக்கியே அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி இல்லை
அப்படியென்றால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவீர்களா? என செய்தியாளர் மீண்டும் தெளிவான பதிலைப் பெறுவதற்காக கேள்வி எழுப்பியதற்கு, பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் எனச் சொல்லிவிட்டேனே.. அதற்குப் பிறகும் இப்படி ஒரு கேள்வியா? எனத் தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ். இந்தப் பேச்சின் மூலம், 2024 தேர்தலிலும், பாமக தலைமையிலான கூட்டணியையே அமைக்க இருப்பதையும், அதிமுக கூட்டணியில் இணையமாட்டோம் என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் அன்புமணி.
கடந்த தேர்தல்
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி என்ற முழக்கத்தோடு தனித்துப் போட்டியிட்ட பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2019ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வெற்றிவாய்ப்பை இழந்தது. பின்னர், அன்புமணி ராமதாஸ் அதிமுக ஆதரவோடு ராஜ்யசபா எம்.பி ஆனார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் மீண்டும் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என அன்புமணி பேசி வருகிறார்.
அன்புமணி
மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்புமணி ராமதாஸ், "ரயில்வேயில் புதிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும், ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் நிலுவையில் உள்ளது. அந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஆறு முறை பாமக அறிக்கை விட்டிருக்கிறது. ஏழை மக்கள் பயன்படுத்தக் கூடியது ரயில்வே மட்டும்தான். ரயில்வே துறை ஏழை மக்களை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த துறை செயல்பட வேண்டும்." என்றார்.
மழை - வரம்
தொடர்ந்து பேசிய அவர், "மழை வந்தாலே சாபம் போல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அதை வரமாக பார்க்க வேண்டும். அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் மழை குறைந்துவிடும் என்றுதான் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பெய்யக்கூடிய மழையை நாம் சேமிக்க வேண்டும். சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஏரிகளை புதிதாக உருவாக்க வேண்டும். சென்னையில் இடம் இல்லை என்றாலும் மாமல்லபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உருவாக்க வேண்டும். உலகின் பிரச்சனை காலநிலை மாற்றம் அதை பற்றி யாரும் பேசுவதில்லை." எனத் தெரிவித்தார்.
ஆளுநர் + முதல்வர்
மேலும், "ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் பல கட்சிகள் பல விதமாக உள்ளனர். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் பிரச்னை இருக்கக் கூடாது. அவர்கள் பேசி தீர்க்க வேண்டும். இதனால் தமிழ்நாடு மக்களுக்கு தான் பிரச்னை. ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.