பிரதமர் நிகழ்ச்சியில்.. பேச்சை பாதியில் நிறுத்த சொன்ன கேபி ராமலிங்கம்? என்ன நடந்தது- ஓபிஎஸ் விளக்கம்
சென்னை: சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருந்த போது ஓபிஎஸ் பேச்சை பாஜகவின் கே.பி. ராமலிங்கம் நிறுத்த சொன்னதாகத் தகவல்கள் பரவிய நிலையில், இது குறித்து பன்னீர்செல்வமே விளக்கமளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கும் நிலையில், இங்குப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே பல முறை தமிழகத்திற்கு வந்து சென்றுவிட்டார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
ஓபிஎஸ் பேச்சு பாதியில் நிறுத்தம்: அதில் பாஜக கூட்டணியில் இருந்து பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், பாமகவின் ராமதாஸ், அன்புமணி, டிடிவி தினகரன். ஜிகே வாசன் எனப் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசி முடித்த பிறகு ஓபிஎஸ் பேசினார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் பேசும் போதே பிரதமர் மோடி மேடைக்கு வந்ததால் அவரது பேச்சை பாஜகவின் கேபி ராமலிங்கம் நிறுத்த சொன்னார்.
இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் நன்றி வணக்கம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது. முன்னாள் முதல்வரை இப்படி நடத்துவது சரி இல்லை என்று பலரும் விமர்சித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு, "ஓபிஎஸ் இதற்காக வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். ஆனால் அவர் வெட்கமும் படமாட்டார், வேதனையும் படமாட்டார், தூசு எனத் துடைத்துப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்" என்று சாடி இருந்தார்.
விளதக்கம்: இதற்கிடையே அன்றைய தினம் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஓபிஎஸ் தரப்பே விளக்கம் கொடுத்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில். " அதாவது பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றால்.. அவர் மேடைக்கு வரும் போது கூட்டத்தில் யாருமே பேசக்கூடாது. பாஜகவின் கே.பி. ராமலிங்கம் தான் அன்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதனால் அவரிடம் ஒரு மைக் இருந்தது. அன்று என்னைப் பேச அழைத்தார்கள் என்று நான் பேசிக் கொண்டு இருந்தேன்.
நான் பேசிக் கொண்டு இருக்கும் போது பிரதமர் மோடி மேடைக்கு வந்துவிட்டார். பாதுகாப்பு நலன் கருதி பிரதமர் மோடி மேடைக்கு வரும் போது யாரும் பேசக்கூடாது என்ற நடைமுறை இருக்கிறது. ஏனென்றால் அவர் மேடைக்கு வந்தால் அனைத்து தலைவர்களையும் பார்த்து வணங்குவார். மேலும் மக்களைப் பார்த்து வணங்குவார். அப்போது எந்தவொரு சொந்தரவும் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறை.
என்ன நடந்தது: அப்போது கே.பி.ராமலிங்கம் என்னிடம் வந்து பிரதமர் மோடி உள்ளே வந்துவிட்டார் என்றார். இதையடுத்து நானும் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், சிலர் இது குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். நான் பேசும் போது மைக்கை என்னிடம் இருந்து பிடுங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல்" என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவில் உரிய அங்கீகாரமும் இருக்கிறது அன்பும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் பிரதமர் மோடி இந்தியாவைத் தனது நிர்வாகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வந்துள்ளார். உலகின் பல நாடுகள் பிரதமர் மோடியின் நிர்வாகத்தைப் பாராட்டி வருகிறது. அந்தளவுக்கு உலக தலைவர்களின் நல்மதிப்பை பெற்றவராகவும். உலக தலைவர்களில் ஒருவருமாகவே பிரதமர் மோடி இருக்கிறார்" என்றார்.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்
இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் போட்டியிட இருக்கிறார். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் களமிறங்குகிறார். அவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட உள்ளார். இதனால் இரட்டை இலை சின்னத்தையே எதிர்த்து அவர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இரட்டை இலைக்கு எதிராகவே போட்டியிடுகிறார்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் தரப்பு நறுக் பதிலை அளித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தி அதிமுக படுதோல்வி அடைவதைத் தொண்டர்கள் விரும்பவில்லை என்பதால் சின்னத்தை முடக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications