கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தவித்த பெண்மணி.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2 மணி நேரமாக பேருந்துகள் இல்லை என பிரபல தமிழ் செய்தி தொலைகாட்சியில் வெளியிடப்பட்ட செய்திக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையின் புதிய பேருந்து முனையமான கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்தது.

சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டி, கிளாம்பாக்கத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 30ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை, அதிக இடவசதி உடன், அடுத்த 15 ஆண்டு போக்குவரத்து நெருக்கத்தை கணக்கிட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில், 130 அரசு பஸ்கள், 85 தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வசதியாக 3 ஆயிரத்து 500 மாநகர பேருந்துகள் செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் தரைத் தளம், முதல் தளத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இந்த பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு 5 முதல் 10 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் திறக்கப்பட்டது முதலே விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதற்கு காரணம் தூரம். இரண்டாவது ரயில் நிலையம் அருகில் அமைக்காதது. 3வது ஜிஎஸ்டி சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்காதது. இதில் ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு 20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பணிகள் முடிந்து திறக்க ஓராண்டு ஆகும் என்று அறிவித்துள்ளது. இதேபோல் நடைமேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மயிலாப்பூர், மந்தைவெளி வழித்தடத்தில் 2 மணி நேரமாக பேருந்துகள் இல்லை என பிரபல தமிழ் செய்தி தொலைகாட்சியில் செய்தி வெளியானது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டதாக ஊடகம் செய்தியில் கூறியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அளித்துள்ள விளக்கத்தில், "மாநகர் போக்குவரத்து கழகத்தின் மூலம் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 298 பேருந்துகள் மூலம் 1,691 பயண நடைகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக 202 பேருந்துகள் மூலமாக 2,386 பயண நடைகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக 4,077 பயண நடைகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மைலாப்பூர் வழியாக பிராட்வே வரை தடம் எண்.21G -ல் 164 பயண நடைகள் இயக்கப்படுகிறது.
இன்று (06.01.2024) காலை மாரத்தான் போட்டியானது, போர் நினைவுச்சின்னம் முதல் காமராஜர் சாலை வழியாக பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வரை நடைபெற்றதால், அவ்வழியாக இயக்கப்படும் சில பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சற்று காலதாமதமாக வந்தபோதும் மாற்று பேருந்துகள் மூலம் மைலாப்பூருக்கு பேருந்து இயக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. மேலும், நடத்துனர் பொதுமக்களிடம் பேசிய விதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லாததால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" இவ்வாற மாநகர் போக்குவரத்துக் கழக இயக்குனர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications