சரிந்த பெங்களூர், ஹைதராபாத்.. ஒரே ஆண்டில் சென்னை படைத்த அசாத்திய சாதனை.. லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் வீட்டு மனைக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி கண்ட ஒரே பெருநகரமாக சென்னை உருவெடுத்து உள்ளது.

இந்திய நகரங்களில் வீடுகள் விற்பனை
தில்லி-NCR, மும்பை பெருநகரப் பகுதி, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வீடுகள் விற்பனை சுமார் 20% குறைந்து 96,285 யூனிட்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,20,335 யூனிட்கள் விற்பனையாகின. இந்த ஏழு நகரங்களிலும் வீடுகள் விற்பனை குறைந்த நிலையில், சென்னை மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. சென்னையில் வீட்டு மனைக்கான தேவை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், இங்கு உலகளாவிய திறன் மையங்கள் (GCC) அதிக அளவில் பெருகி வருவதுதான் என்று ரியல் எஸ்டேட் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் அதிகரித்த வீட்டு விற்பனை
சென்னையில் மட்டுமே கடந்த ஆண்டு 11% உயர்வுடன் ரியல் எஸ்டேட் துறையில் பாய்ச்சல் காட்டி உள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 5,660 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 5,100 யூனிட்களாக இருந்தது. காலாண்டு அடிப்படையில் பார்த்தால், நகரத்தில் விற்பனை 40% அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னையில் வீட்டு விற்பனை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. டெவலப்பர்கள் புதிய கட்டுமானங்களை அறிமுகப்படுத்தியதால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் புதிய கட்டுமானங்கள் 79% உயர்ந்துள்ளன. மொத்தமாக கடந்த நிதி ஆண்டு 65% அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சென்னையில் சுமார் 8,525 வீடுகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 79% அதிகரிப்பாகும், மேலும் ஆண்டு அதிகரிப்பு 65% ஆகும். புதிய விநியோகத்தில் 79% நடுத்தர மற்றும் பிரீமியம் பிரிவுகள் அடக்கம். 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 5,660 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. ஆண்டுதோறும் விற்பனை 11% உயர்ந்துள்ளது என்று அந்த ஆய்வு காட்டுகிறது.
சென்னையில் மட்டும் ஏன் இந்த மாறுபட்ட போக்கு?
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய திறன் மையங்களுக்கான (GCC) அலுவலக இடத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், வீட்டு மனைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) அல்லது GCCகள் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் வெளிநாட்டுப் பிரிவுகளாகும். இவை உலகளவில் செயல்பட்டு, தகவல் தொழில்நுட்பம், நிதி, மனித வளம் மற்றும் பகுப்பாய்வு போன்ற பல்வேறு ஆதரவு சேவைகளை தங்கள் தாய் நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.
சென்னையில், GCCகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக சுமார் 5.29 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளன. இதில், சுமார் 2 மில்லியன் சதுர அடி 2023 இல் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3.29 மில்லியன் சதுர அடி 2024 இல் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு 64% உயர்வு ஏற்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிலும் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளின் தேவையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications