கடைசி வரை மோடியை சந்திக்க முடியவில்லை.. கைவிட்ட பாஜக.. ஓபிஎஸ் தரப்பின் அடுத்த நகர்வு என்ன?
சென்னை: தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவோ, வரவேற்கவோ முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் முன் நிற்கும் வாய்ப்புகள் என்ன என்பது தொடர்பாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தியதோடு, மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே நேற்று பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ்க்கு பிரதமர் மோடி அனுமதி மறுத்தார். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோரை சந்தித்தார். ஏற்கனவே அமித்ஷா சென்னை வந்தபோதும் ஓபிஎஸ் தரப்பை சந்திக்கவில்லை.
தற்போது மோடியும் சந்திக்காததால், ஓபிஎஸ் அரசியல் எந்தப் பக்கம் நகரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்.4ல் மதுரையில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்னும் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு இருந்து வருகிறது.
ஆனால் ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைத்துக் கொள்ள அவர் இதுவரை தனிக் கட்சியை தொடங்கவில்லை. இன்னும் அதிமுக தொண்டர் மீட்புக் குழு என்பதையே நடத்தி வருகிறார். அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை என்று ஓபிஎஸ் கூறிவிட்ட போதும், எடப்பாடி பழனிசாமி இதுவரை செவிசாய்க்கவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளர் காலில் விழவும் தயார் என்ற போதும், காலம் கடந்த ஒன்று என்று இபிஎஸ் கூறுகிறார்.இதனால் ஓபிஎஸ் முன்பாக 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. அதாவது தனிக் கட்சித் தொடங்கி பாஜக மூலமாக அதிமுகவிடம் இருந்து சில தொகுதிகள் பெற முடியும். அதேபோல் பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடரலாம்.
அப்படியில்லை என்றால் மாற்றுக் கட்சிகளான திமுக, தவெக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இணையலாம். இந்த சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் விரைவில் எடப்பாடி பழனிசாமி பக்கமாகச் சாய்ந்துவிடுவார்கள். இதனால் ஓபிஎஸ் செப்.4ல் நடக்கும் மாநாட்டில் புதிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications