"தப்பு செஞ்சுட்டீங்க தலைவரே.. இப்படியே போனால் கஷ்டம்தான்".. தொண்டர்கள் குமுறல்.. சிக்கலில் திமுக!
திருச்சி சிவாவுக்கு ஏன் மீண்டும் சீட் தர வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது
சென்னை: ராஜ்ய சபா உறுப்பினர்கள் 3 பேரை நிறுத்தி உள்ளது திமுக.. இதன்மூலம் ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தை அசைத்து பார்த்து வருகின்றன.
திமுக வேட்பாளர்களாக அறிவித்த பெயர்கள் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்ஆர் இளங்கோ ஆகியோர்!
இதில் என்ஆர் இளங்கோவை அறிவித்ததில் ஆச்சரியம் இல்லை.. கடந்த ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு பதிலாக நிறுத்தப்பட்டு, அதன்பிறகு மனுவை வாபஸ் பெறும்போதே, அடுத்த முறை என்ஆர் இளங்கோவுக்குதான் சீட் என்று திமுக தலைவர் உறுதி தந்திருந்தார்.. அதன்படியே இப்போது சொன்ன சொல்லை காப்பாற்றி உள்ளார். இவர் திமுகவின் மூத்த வழக்கறிஞர்.. கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டவரும்கூட!

அந்தியூர் செல்வராஜ்
ஆனால் மற்ற 2 வேட்பாளர்களை அறிவித்தது குறித்துதான் சற்று எதிர்மறை கருத்துகள் உலா வருகின்றன.. கொங்கு மண்டலம் சார்பாக அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தியூர் செல்வராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவாவுக்கு திரும்பவும் சீட் தரக்கூடாது என்று சொல்லப்பட்ட நிலையில், அவருக்கே மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக சிஏஏவுக்கு எதிர்ப்பு கூடிவரும் சமயத்தில், இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு தரப்படும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலேயும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

உறுப்பினர் பதவி
பொதுவாக, திமுகவை பொறுத்தவரையில் 3 உறுப்பினர் பதவிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் திமுகவினரே எடுத்து கொள்ளும் முடிவில் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.. காரணம் ஏகப்பட்ட சீனியர்கள் அந்த பதவிக்காக துண்டு போட்டு காத்திருந்ததுதான். இப்போது கூட்டணி கட்சியை சேர்ந்தவர் யாருக்குமே சீட் வழங்கப்படவில்லை.. இது கூட்டணிக்குள் கருத்து மோதலாக வெளிப்படலாம் என்றே தெரிகிறது.

உட்கட்சி பூசல்
முக்கியமாக திருச்சி சிவாவுக்கு சீட் தரவே கூடாது என்று கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் பெருகிய நிலையில், இப்போது உட்கட்சி பூசல் மேலும் அதிகமாகும் என்றே கணிக்கப்படுகிறது. ஆனால் திருச்சி சிவா விஷயத்தில் ஒன்றை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.. ராஜ்யசபாவில் அவரது பேச்சு, செயல்பாடுகள் கவனிக்கத்தக்கவையாகவே இருந்துள்ளன.

4 முறையா?
அந்த வகையில் இப்படி ஒரு வேட்பாளர் அங்கு இந்த சமயத்தில் இருப்பது திமுகவுக்குதான் பலம் தரும்! இருந்தாலும், 4 முறை வாய்ப்பு தந்துள்ளதற்கு உடன்பிறப்புக்களின் புலம்பல் சத்தம் அதிகமாகவே எழுந்துள்ளது. அதேபோல இஸ்லாமிய பெருமக்களின் அதிருப்தியையும் சம்பாதிக்க வேண்டி இருக்கும்.. இஸ்லாமியர்களுக்கு ஆதரவு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசும் திமுக தலைமை இப்படி செய்துவிட்டதே என்ற பொருமல்கள் எழ தொடங்கி உள்ளன.

சறுக்கல் + மைனஸ்
அதேபோல, வில்சன் வக்கீல், இளங்கோ வக்கீல் , இப்படியே வக்கீல்களாகவே டெல்லிக்கு அனுப்பி கொண்டிருப்பது எதனால்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. இதில் ஒரே ஒரு ஆறுதல் அந்தியூர் செல்வராஜ்.. இனரீதியாக பார்த்தாலும், இவரை நிறுத்தப்பட்டதற்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.. எனினும், வேட்பாளர் அறிவிப்பு என்றாலே இவர்கள் எல்லாருமே கிட்டத்தட்ட தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டவர்கள் போலதான்.. அதனால் 3 வேட்பாளர்களின் இந்த அறிவிப்பானது அக்கட்சிக்கு சறுக்கல் + மைனஸ் என்ற பிம்பத்தைதான் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications