சிபிஐ விசாரணை தேவையில்லை.. எங்க போலீஸே போதும்.. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்திய சீமான் பேட்டி!
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்த உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டுக்கு அருகிலேயே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? குறிப்பாக பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “சரண் அடைந்தவர்களை விசாரித்து ஏன் எதற்காக கொலை செய்தார்கள் எனக் கண்டறிந்தார்களா? கஸ்டடியில் எடுத்து விசாரித்தீர்களா? கொலை செய்தவர்கள் வேறு, சரணடைந்தவர்கள் வேறு என்பது சாதாரண மக்களுக்கே தெரிகிறது. அதனால் தான் நியாயமான விசாரணை வேண்டும் என்கிறோம். கொலையாளிகளை 1 நாளில் கண்டுபிடிக்க முடியாதா?
சிபிஐ விசாரணை தேவையில்லை. எங்கள் மாநிலத்திலேயே ஆகச்சிறந்த காவல்துறை உள்ளது. எங்கள் மண்ணின் மைந்தன் மரணத்தை கண்டுபிடிக்க அதை எங்கள் மாநில காவல்துறையே கண்டுபிடிப்பதுதான் சரியானது. சிபிஐ இதுவரை எந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளது?” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications