பட்டாபிராம்.. சென்னை புறநகர் மக்கள் 9 கிமீ சுற்றி செல்ல அவசியமில்லை.. ஆனால் இனிதான் பெரிய சிக்கலே
சென்னை: ஆவடி, திருவள்ளூர், திருநின்றவூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் என சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்து வந்த ஒரு ரயில்வே கேட் என்றால், அது பட்டாபிராம் ரயில்வே கேட் தான். இந்த ரயில்வே கேட்டில் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மேம்பால பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. இன்று திறக்கப்படும் இந்த மேம்பாலத்தால் 9 கிமீ சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் ஒரு சிக்கலும் இருக்கிறது.
சென்னையை சுற்றிலும் உள்ள ரயில் பாதைகள், புறநகர் பகுதி மக்களுக்கு வரம் என்றாலும், அதன் ரயில்வே கேட்டுகள் சாபமாக உள்ளன. சென்னை திருவள்ளூர் பிரதான நெடுஞ்சாலையில் அம்பத்தூர், ஆவடியை கடந்து செல்ல முயன்றால், ரயில்வே கேட் ஒன்று வரும். அந்த ரயில்வே கேட் தான் பட்டாபிராம் ரயில்வே கேட். சென்னையிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் சாலையில் உள்ள இந்த ரயில்வே கேட், அடிக்கடி ரயில்கள் வரும் காரணத்தால் மூடப்படுவது வழக்கம். இதனால் ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் வழியாக முக்கிய நேரங்களில் வாகனங்கள் கடக்க முடியாமல் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

இதனால் மக்கள் ஏராளமான குக்கிராமங்களை கடந்து சென்னை வண்டலூர் வெளிவட்ட சாலையை அடைந்து அதன்பிறகு மேம்பாலத்தில் ஏறி இறங்கி போக வேண்டிய நிலை இருக்கிறது. கிட்டத்தட்ட 9 கிமீ தூரம் மக்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.இதனால் நொந்து போன மக்கள் கட்டாயம் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்படி பட்டாபிராம் அருகே ரூ.52 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அண்மையில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, இதில் ஒரு பகுதி மட்டும் இன்று திறக்கப்படுகிறது.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு ஷங்கர், கடந்த வாரம், பட்டாபிராம் மேம்பாலத்தை பார்வையிட்டு, திறப்புப் பணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பட்டாபிராம் மேம்பாலத்தில் ஒரு பகுதியை தவிர, மற்ற அனைத்து பணிகளும் முடிந்துள்ளது என்றும் முதற்கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி, ஒரு வழிப்பாதையை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதன்பின், ரயில்வே கேட் மூடப்பட்டு, மீதமுள்ள பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.
அதேநேரம் மேம்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு மக்களின் பிரச்னைகள் மற்றும் நிறைவடையாத மற்றொரு வழிப் பாதையை விரைவாக முடிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். தற்போதைய நிலையில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகளை ஒரு வழியாக ஒரு பகுதியை அரசு முடித்துவிட்டது. முன்னதாக இந்த மேம்பாலம் இல்லாதது ஒருபுறம் எனில்,ஆவடி முதல், திருநின்றவூர் வரை, கூவம் ஆறு, ஆவடி ஏரி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகள் உள்ளதால், மாற்றுப்பாதைளை உருவாக்கவே முடியாத நிலை இருந்து. இதனால் பல கிராமங்களை சுமார் 9 கிலோ மீட்டர் சென்ற மக்கள் இன்று முதல் சுற்றி செல்லாமல் எளிதாக போக முடியும்.
அதன்படி ஆவடியிலிருந்து திருநின்றவூர் செல்வதற்கான வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டிருப்பதால் இன்று திறக்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் ஓரளவுக்கு போக்குவரத்து சீரடைந்து, இரண்டாவது வழித்தடம் அடுத்த ஆறு மாதத்தில் முடிக்கப்படும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இரண்டாவது வழித்தடத்தில் மேம்பாலம் கட்டி முடிக்க, கீழே இருக்கும் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால் தான் இரண்டாவது வழித்தடத்தில் பணிகளை மேற்கொள்ள முடியும் என்கிற சிக்கல் இருக்கிறது.. அப்படி அவ்வாறு நிரந்தரமாக மூடினால், மேம்பாலம் கட்டி முடிக்கும் வரை, போக்குவரத்து நிலை மிகவும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications