மத்திய அரசு துறை செயலரில் 89 பேரில் 85 பேர் உயர்ஜாதி- OBC ஒருவரும் இல்லை- மு.க.ஸ்டாலின் ஷாக் தகவல்
சென்னை: மத்திய அரசு செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்ஜாதியினர்தான்; இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் கூட இல்லை என்கிற நிலைமை மாற வேண்டும்; நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற விபி சிங் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமையாக கிடைக்காத - கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது! குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

இடஒதுக்கீடு இல்லையே: பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப்பிரிவு! மத்திய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்சாதியினர். பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர், பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டும்தான்! பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது! மத்திய அரசு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், 82 பேர் உயர்சாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது- மத்திய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள் 275 பெயரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்! அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது.
நீதித்துறை இடஒதுக்கீடு: 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான்! இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது. சரி, நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசுத் துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தபடவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்கவேண்டும். அதுதான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கம்!
பல் மருத்து படிப்பு இடஒதுக்கீடு: அந்தப் பணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் சோர்ந்து போகாது. அதற்கு எடுத்துக்காட்டுதான், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்றிலிருந்து இன்றைக்கு வரை நாம் முன்னெடுக்கின்ற சட்ட முயற்சிகள்! இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இல்லாமல் இருந்த ஓபிசி இடஒதுக்கீட்டை 29.7.2021 அன்று உச்சநீதிமன்றம் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்தியாவிற்கே பெற்றுத் தந்தது! அதுமட்டுமா! தமிழ்நாட்டில் சமூகநீதியைக் கண்காணிக்க குழு அமைத்திருக்கிறோம்.
சமூக நீதி நாள்: தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும் - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கொண்டாடி வருகிறோம். சமூகநீதிக்குத் தடையாக அமைந்துள்ள நீட் தேர்வை அகற்றும் சட்டப்போராட்டத்திலும், அறப்போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டைதான் தன்னுடைய ரத்த சொந்தங்கள் வாழுகிற மாநிலமாக நினைத்தார் வி.பி.சிங் அவர்கள். தந்தை பெரியாரை தன்னுடைய உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் அவர்கள் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications