ஜூன் முதல் வாரத்தில் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம்.. தனியார் பள்ளிகள் சங்கம் திடீர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, CBSE பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டும் என RTOக்கள் நிர்பந்தம் செய்வதாகவும், FC வழங்க லஞ்சம் கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பாதுகாப்புத் தணிக்கை பணிகளைத் தமிழக போக்குவரத்துத் துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

No School Vehicles in First Week of June Private Schools Accuse RTOs of Corruption

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவன வாகனங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போக்குவரத்துத் துறை, கல்வித் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள் குழுவினர் நேரடியாகக் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றும், குறிப்பிட்ட சில இடங்களில் வாகனங்களை வரவழைத்தும் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவசர கால வழி, ஜன்னல்கள், படிக்கட்டுகளின் தரம், தீயணைப்பு உபகரணங்கள், முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஓட்டுநர்களின் கண் பார்வைத் திறன் உள்ளிட்ட 16 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆய்வின் போது தீவிரமாகச் சரிபார்க்கப்படுகின்றன. வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றுக்கான தகுதிச் சான்று (FC) மறுக்கப்படும் என்றும், பெரிய அளவிலான விதிமீறல்கள் இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க மறுபுறம், இந்த பாதுகாப்பு ஆய்வுகளுக்கு மத்தியில் தமிழக அரசின் சில புதிய நடைமுறைகள் தங்களுக்கு கடும் நிதி நெருக்கடியையும் அலைச்சலையும் ஏற்படுத்துவதாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

மாவட்ட எல்லைகளைக் கூடத் தாண்டாத உள்ளூர் பள்ளி வாகனங்களுக்குக் கூட ஜி.பி.ஆர்.எஸ் (GPRS) கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சந்தையில் வெறும் 3,000 ரூபாய் மதிப்புள்ள இந்த கருவியை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே 18,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த கருவியைப் பொருத்தவில்லை என்றால் வாகனங்களுக்குத் தகுதிச் சான்று (FC) வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) பள்ளி வாகனங்களுக்குத் தகுதிச் சான்று பெறுவதற்கு, ஒவ்வொரு வாகனத்திற்கும் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வரை லஞ்சம் கோரப்படுவதாகவும் தனியார் பள்ளி கூட்டமைப்பினர் தங்களது வேதனையைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி முதல்வர் ஜோசப் விஜய்யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதைக் கண்டித்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை இயக்காமல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+