ஒற்றைத் தலைமை.. எந்த மாற்றமும் இல்லை.. கோர்ட் தீர்ப்பிற்கு பின் ஜெயக்குமார் அடித்த பரபர கமெண்ட்
சென்னை: அதிமுக பொதுக்குழு குறித்த நீதிமன்ற உத்தரவால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும், ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜூன் 14ல் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 9 நாட்களாக இரு தரப்பிலும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. நேற்று 95% அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்ற நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது.

மேல்முறையீடு
ஆனால் அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த இந்த மனு மீது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு நள்ளிரவில் மனுவை விசாரித்தது. இந்த மனு மீது இரவில் நீதிபதி வீட்டில் விசாரணை நடைபெற்றதால், இரு தரப்பு ஆதரவாளர்களும் அங்கு குவிந்தனர். இரு தரப்பிலும் காரசார வாதம் செய்யப்பட்டது

ஓபிஎஸ் - இபிஎஸ் வாதம்
இந்த வழக்கில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு தான் சம்மதம் தெரிவிப்பதாகவும், அதனைத் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழுவில் இது நடக்கலாம் இது நடக்கக் கூடாது என்று கூற இயலாது. எந்த அஜெண்டாகளும் இல்லாமல் கூட இதற்கு முன் பொது குழுக்கள் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுக்குழுவுக்கு அஜெண்டா கொடுப்பதே இல்லை என இபிஎஸ் தரப்பு வாதிட்டது.

ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு
தொடர்ந்து பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்று உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால் 23 தீர்மானங்களை தவிர்த்து, புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதன் காரணமாக ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயக்குமார் பதில்
இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று ஆதரவும் தெரிவித்து வருகின்றனா். அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications