தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: நம்ம சென்னை செயலி மூலம் புகார் அளிக்கலாம் - சென்னை மாநகராட்சி
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் மழைநீர் தேங்குவது, மின்வெட்டு, மரங்கள் விழுவது போன்ற புகார்களை நம்ம சென்னை செயலி வாயிலாகவும், ட்விட்டர் வழியாகவும் புகார் அளிக்க சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது.
வழக்கத்தை விட சற்று தாமதமாக இந்த ஆண்டு பருவமழை தலைகாட்டினாலும் ஆரம்ப நாட்களிலேயே சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

விடிய விடிய மழை
குறிப்பாக நேற்று காலை சென்னையில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பின்னர் மேகமூட்டமாக காட்சி அளித்த வானம், மாலை நேரத்தில் கனமழை கொட்ட தொடங்கியது. இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னையின் பல இடங்களில் விடிய விடிய மழை கொட்டியது. இதனால், சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
மழை இன்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் ஆங்காங்கே நகரில் மழை நீர் தேங்குவது, மின்வெட்டு, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்திக்க நேரிடும்.

நம்ம சென்னை செயலி
எனவே இதனை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மழை தொடர்பான புகார்களை மக்கள் நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்க தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

1913 என்ற எண்ணிலும்...
தெருவிளக்கு பழுது, மழை நீர் தேக்கம், குடிநீருடன் கழிவு நீர் கலப்பு, கழிவு நீர் கரைதல், குடிநீர் வரவில்லை, மரம் விழுதல், மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணிலும் 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications