மோடி, EDக்கு பயமில்லையா? ஆகாஷ் பாஸ்கரன் எங்கே? வீர வசனம் பேசும் உதயநிதி.. அட்டாக் மோடில் நயினார்
சென்னை: EDக்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் எதுகை மோனையில் வீர வசனம் பேசிவிட்டு தப்பி விடலாம் என உதயநிதி நினைக்கிறார் எனவும், தவறு செய்யவில்லை என்றால் உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும் ஆகாஷ் பாஸ்கரனும் ஏன் தலை மறைவாக உள்ளார்கள் என விளக்கம் கொடுப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தமிழக தலைவரான நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு முறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இரண்டாவது முறை நடைபெற்ற சோதனையில் டாஸ்மாக் மேலான் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், தொழிலதிபர் ரத்தீஷ், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் நிலையில் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிலையில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்பதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யத்தான் செய்வார்கள். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறோம். EDக்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். மிரட்ட முயற்சித்தார்கள்.. மிரட்டி அடிபணிய வைப்பதற்கு திமுக அடிமை கட்சியல்ல" என கூறினார்.
இந்த நிலையில் எதுகை மோனையில் வீர வசனம் பேசிவிட்டு தப்பி விடலாம் என உதயநிதி நினைக்கிறார் எனவும், தவறு செய்யவில்லை என்றால் உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும் ஆகாஷ் பாஸ்கரனும் ஏன் தலை மறைவாக உள்ளார்கள் என விளக்கம் கொடுப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தமிழக தலைவரான நயினார் நாகேந்திரன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை" என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் திரு. உதயநிதி அவர்கள்.
தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக திரு. உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா? மார்ச் 2011-ல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின் போது, CBI கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சோதனை செய்ய, கீழே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா?
அன்று பயம் காட்டி பேரம் செய்தது அம்மையார் திருமதி. சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசாங்கம் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களோ, பாஜக-வோ அல்ல!
அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள். அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று திரு. உதயநிதி அவர்கள் அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறது போல.
கேள்வி, நீங்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு பயப்படுகிறீர்களா என்பது அல்ல! அவர் என்றுமே அரசியல் காழ்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகத் தலைவர்! நாட்டைக் காப்பதையும், வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதையும், நம் பழம்பெரும் நாகரிகத்தை மீட்டெடுப்பதையும் மட்டுமே உயிர் மூச்சாக நினைத்துச் செயல்பட்டு வரும் உன்னதத் தலைவர்! அப்படிப்பட்ட நிலையில், திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டுமே...
ஆக, உண்மையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்! அந்த நீதியானது நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை!" என கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications