களைகட்டும் தவெக மாநாடு.. ரசிகர்களுக்காக விஜய் செய்த காரியம்.. சூப்பர் அறிவிப்பு
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடக்கவுள்ளது. இதையொட்டி, திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாட்டுக்கு வரும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் தீவிரமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. மாநாட்டில் லட்சக்கணக்கிலான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் மாலை 4 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டு மேடைக்கு வரவுள்ளார். பின்னர், 100 அடி உயர கொடிக் கம்பத்தில் நடிகர் விஜய் கட்சியின் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். கட்சிக் கொடி ரிமோட் மூலம் ஏற்றப்படவுள்ளது. மாநாட்டு மேடையில் இருந்து 600 மீட்டர் தூரத்திற்கு ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு மேல் தொடங்கும் இந்த மாநாடு இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டில் பேசி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இறுதியில் தவெக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு கருதி மாநாடு நடக்கும் பகுதியில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் 1500 பேர் அமரும் வகையில் நற்காலிகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாடு நடக்கும் இடத்தில் குவிந்து வருகின்றனர்.
நேற்று இரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் காலை 7 மணிக்கே தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்துக்கும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாநாட்டுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு தனியாக ஒருவழித்தடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இந்த வழியில் உள்ள சுங்கச் சாவடியில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச் சாவடிகளிலும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தவெக நிர்வாகிகள் சுங்கச் சாவடியில் இருந்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மாநாட்டுக்கு வாகனங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications