மத்திய பாஜக அரசு குறித்து எடப்பாடி, வானதி சீனிவாசன் 'அந்த வார்த்தையை' சொன்னாங்களா? வெடித்த சர்ச்சை!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய அரசு என்ற சொல்லை உச்சரிப்பது இல்லை. இதே பாணியில்தான் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல.. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் பேச தொடங்கி இருப்பது ஆச்சரியத்தையும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலே மத்திய அரசு, மத்திய சர்க்கார், இந்திய சர்க்கார், இந்தியப் பேரரசு போன்ற வழக்கமான கருணாநிதி காலத்து சொற்களை தவிர்த்துவிட்டது. அதற்கு பதிலாக யாருமே எதிர்பார்க்காத வகையில் 'ஒன்றிய' அரசு என அழைத்தது.

ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி வந்தது தனித் தமிழ்நாடு கோருகிற குறிப்பாக தனித் தமிழ்நாட்டை ஆயுதப் போரின் மூலம் உருவாக்க வேண்டும் என்கிற அதிதீவிர இடதுசாரிகள்தான்.
ஒட்டுமொத்தமாக மாற்றிய 'ஒன்றிய அரசு': அப்படியான இயக்கங்கள் பயன்படுத்திய சொல்லை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுகவின் அரசு ஆவணங்கள், முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே பயன்படுத்தியது ஆச்சரியத்தையும் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது. அத்துடன் திமுகவின் அத்தனை கூட்டணி கட்சிகளும் திமுகவின் ஒவ்வொரு தொண்டனும் மத்திய அரசு என்பதை மறந்து 'ஒன்றிய அரசு' என்ற சொல்லை பயன்படுத்தி வருவது ஒரு முதன்மை அரசியல் நிகழ்வு.
அதிமுக, பாஜக எதிர்ப்பு: ஆனால் அப்போது அதிமுக, பாஜக இரண்டுமே கூட்டணியில் இருந்தன. இதனால் "ஒன்றிய" அரசு என சொல்வதை மிக கடுமையாக விமர்சித்தன. ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல. இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று சொல்வது நமது இந்திய தாய்த் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றெல்லாம் விமர்சித்திருந்தார். பொதுவாக அதிமுகவும் பாஜகவும் மத்திய அரசு என்றுதான் அழைப்பது வழக்கம்.
சட்டசபை கூட்டம்: தற்போது பாஜக- அதிமுக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணி முறிவுக்குப் பின்னர் சட்டசபையில் இரு கட்சிகளும் தனித்தனி பாதையில்தான் பயணிக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது சட்டசபையில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பாஜக சார்பாக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசினார்.
வார்த்தைக்கு வார்த்தை "ஒன்றிய அரசு": சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியும் வானதி சீனிவாசனும் மத்திய அரசு என்ற சொல்லுக்குப் பதில் "ஒன்றிய அரசு" என்ற சொல்லையே பயன்படுத்தினர். சட்டசபைக்குள்ளே மட்டும் அல்ல சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய போதும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவின் வானதி சீனிவாசனும் வார்த்தைக்கு வார்த்தை "ஒன்றிய" அரசு என்பதை அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டனர்.
சமூக வலைதளங்களில் விமர்சனம்: இருவருமே புழக்கத்தில் இரண்டற கலந்துவிட்ட சொல்லாகிவிட்டதால் 'ஒன்றிய அரசு' என இயல்பாகவே பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் 'ஒன்றிய அரசு' என்பதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இன்று அதையே இருவரும் பயன்படுத்துகிறார்களே என்பதுதான் சமூக வலைதள விவாதமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications