ரிபீட் மோடில் 'மல்லிப்பூ' பாடலை கேட்கிறேன்.. மனதை மயக்குகிறது.. தாமரையை வாழ்த்தி சீமான் ட்வீட்!
சென்னை: வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடல் மனதை மயக்குவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய 'வெந்து தணிந்தது காடு' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'மல்லிப்பூ' பாடல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஹிட் அடித்துள்ளது. இந்தப் பாடலை பலரும் ரிபீட் மோடில் கேட்டு வருகின்றனர்.
வெந்து தணிந்தது காடு! சன் டேக்கு வணக்கத்த போடு! புரட்டாசியால் களையிழந்த காசிமேடு! மீன் விலை விர்ர்!
மல்லிப்பூ பாடல்
வீட்டிலிருந்து நெடுந்தூரத்தில் பணி நிமித்தம் காரணமாக பிரிந்திருக்கும் கணவன் - மனைவி இடையிலான அன்பையும், பிரிவையும் உணர்த்தும் இந்தப்பாடல் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இந்தப் பாடல் துள்ளல் இசையாக இருந்தாலும், வேலைக்காக உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு. அதேபோல் கணவன் - மனைவி இடையிலான பாடலாக இருந்தாலும், துளி விரசம் கூட எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே கவிஞர் தாமரை எழுதி இருக்கிறார்.
சீமான் ட்வீட்
இதற்காக கவிஞர் தாமரைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாமரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய அன்புத்தம்பி
சிலம்பரசன் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து 'வெந்து தணிந்தது காடு' படம் வெளி வந்திருக்கிறது.
மனதை மயக்குகிறது
அதில் என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.
தாமரைக்கு சீமான் வாழ்த்து
கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!
படக்குழுவுக்கு பாராட்டு
அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..! என்று பதிவிட்டுள்ளார்.
தாமரையை அறிமுகம் செய்த சீமான்
பாடலாசிரியர் தாமரை திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இயக்குநர் சீமான் தாமரையின் திறமையை உணர்ந்து, 1998ம் ஆண்டு அவர் இயக்கிய "இனியவளே" திரைப்படத்திற்காக 'தென்றல் எந்தன் நதியை கேட்டது' என்ற பாடல் மூலம் பாடல் தாமரையை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.